உள்ளூர் செய்திகள்

அந்தந்த பகுதியில் வசிப்பவர்கள் வரலாறு ஆய்வு செய்ய வேண்டும்: ஆய்வாளர் எஸ்.பத்மநாபன்

மதுரை: அந்தந்த பகுதியில் வசிப்பவர்கள் அப்பகுதியை ஆய்வு செய்தால் உண்மையான வரலாறு வெளிவரும், என கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மைய ஆய்வாளர் எஸ்.பத்மநாபன் பேசினார். மதுரை திருவள்ளுவர் கழகம் சார்பில் நடந்த அவ்வையாரின் வரலாற்றுச் சுவடுகள் சொற்பொழிவில் அவர் பேசியதாவது: இந்தியர்கள் கலைகளுக்கு செலுத்திய கவனத்தை வரலாற்றில் செலுத்தவில்லை. அதனால் தென் இந்தியாவின் பண்டைய வரலாறு குறித்த ஆதாரங்கள் நமக்கு கிடைக்கவில்லை. இதே கருத்தை மொழியியல் பேரறிஞர் கால்டுவெல், தன் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார். அந்தந்த பகுதியின் வரலாற்றை அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆய்வு செய்து எழுதினால்தான் வரலாற்று உண்மைகள் வெளிவரும். அதனால்தான் 60 ஆண்டுகளாக குமரி மண்ணில் புதைந்துபோன வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டு வரும் பணியை செய்து வருகிறேன். திருவள்ளுவர் தொடர்பான ஆய்வுகள் செய்துள்ளேன். தற்போது அவ்வையாரின் வரலாற்று ஆய்வுகளை கண்டுபிடித்துள்ளேன். அவ்வையார் என்ற பெயரில் பலர் வாழ்ந்துள்ளனர். குறிப்பாக சங்க காலத்து அவ்வையார், கம்பர் காலத்து அவ்வையார், பிற்காலத்தில் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் நுால்கள் இயற்றிய அவ்வையார்களை அனைவரும் அறிந்திருப்பர். சங்க காலத்து அவ்வையாரை நான் ஆய்வு செய்துள்ளேன். அவரை பெற்றெடுத்த பெருமை தமிழகத்திற்கு என்றால், அவ்வையாரம்மன் என்ற கோயில் எழுப்பி அவரை தெய்வமாக்கிய பெருமை குமரிக்கு உண்டு. வெளி உலகத்திற்கு தெரியாத மூன்று அவ்வை கோயில்கள் குமரியில் உள்ளன. ஆடி மாதத்தில் பெண்கள் அவ்வை நோன்பு இருக்கின்றனர் என்றார். திருவள்ளுவர் கழக நிர்வாகிகள் முருகேசன், சுப.ராமச்சந்திரன், பாண்டுரங்கன் பேசினர். ஆறுமுகம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்