உள்ளூர் செய்திகள்

வேதியியல், கணித பாட ’கீ -ஆன்சர்’ தயாரிப்பில் தாராளம் தேவை

கோவை: பிளஸ் 2 வேதியியல், கணித பாடங்களில் சராசரிக்கும் குறைவான பின் தங்கியுள்ள மாணவர்களின் நலன் கருதி, கீ-ஆன்சர் தயாரிப்பில் சற்று தாராளம் காண்பிக்க வேண்டும் என, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.நடப்பு கல்வியாண்டிற்கான பிளஸ் 2 தேர்வுகள், அரசு தேர்வுத்துறை அறிவித்தபடி, சிந்தித்து பதில் அளிக்கும் வகையிலும், எதிர்பாராத கேள்விகளும் அதிக அளவில் இடம்பெற்று இருந்தது. ஆசிரியர்களின் வழக்கமான மனப்பாட பயிற்சி அடிப்படையில், தேர்வை எதிர்கொண்ட மாணவர்கள் வேதியியல், கணிதம் பாடங்களை எதிர்கொள்ள திணறினர். சென்டம் பெறுவது கடினம் என்பது ஒரு புறம் இருக்க, சராசரிக்கு பின்தங்கியுள்ள மாணவர்கள் தேர்ச்சி பெறுவதும் கடினம் என்ற சூழல் எழுந்துள்ளது.கடந்த ஒரு வாரங்களில், வேதியியல் தேர்வு கடினம் என கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு மாணவியும், விழுப்புரத்தில் ஒரு மாணவியும் தற்கொலை செய்துள்ளனர். அதே போல், கணித பாடம் கடினம் என, சேலம் மாணவி தற்கொலை செய்துள்ளார். தேர்வு முடிவுகள் குறித்து அறியாமலேயே, தொடரும் மாணவர்களின் தற்கொலை முடிவு கல்வித்துறை வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் சாமி சத்தியமூர்த்தி கூறுகையில், வேதியியல், கணிதம் பாட கேள்வித்தாள் கடினம் என்பது உண்மை தான். எதிர்பாராத கேள்விகளால் மாணவர்களிடம் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. தற்போது, பாட வல்லுனர்கள் கீ -ஆன்சர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சராசரிக்கும் குறைவான மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, கீ-ஆன்சரை சற்று தாராளமாக தயாரிக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்