தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு: மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உத்தரவு
கோவை: தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு, வரும் பிப்ரவரியில் நடப்பதால், அதிக மாணவர்கள் விண்ணப்பிக்க ஊக்குவிப்பதோடு, சிறப்பு பயிற்சி அளிக்குமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. ஏழாம் வகுப்பு இறுதித்தேர்வில், 55 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்கள், பெற்றோர் ஆண்டு வருமானம், ரூ.3.5 லட்சத்திற்குள் இருப்பவர்கள், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.இன்று (டிச., 4ம் தேதி) முதல் வரும் 19ம் தேதி வரை, விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏழாம் வகுப்பு முழு பாடத்திட்டமும், எட்டாம் வகுப்பில், முதல் இரு பருவ பாடத்திட்டங்களில் இருந்தும், கேள்விகள் இடம்பெறும். மனத்திறன் பகுதிக்கு 90 மதிப்பெண்களும், படிப்பறிவு பகுதிக்கு 90 மதிப்பெண்களும் வழங்கப்படுகின்றன.கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இருந்து மட்டுமே வினாக்கள் இடம்பெறுவதால், பள்ளியில் சிறப்பு வகுப்பு மூலம், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, பயிற்சி அளிக்குமாறு தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.