பாரபட்சமில்லாத பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும்: தலைமையாசிரியர்கள்
மதுரை: மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வை பாரபட்சமின்றி நடத்த வேண்டும் என உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.அரசு பள்ளிகளில் காலியாக உள்ள மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்பதவி உயர்வு வழங்குவதில் முதுகலை ஆசிரியர்களுக்கும் (பி.ஜி.,), உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் 7:2 சதவீதம் பங்கீட்டின்படி வழங்கப்பட்டு வருகிறது.ஆனால் கடந்தாண்டு பதவி உயர்வு கலந்தாய்வில்இந்த விகிதாசாரம் பின்பற்றாமல் பி.ஜி.,க்கு மட்டும் 7 சதவீதம் பங்கீடு பின்பற்றப்பட்டது. உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் பங்கீடு புறக்கணிக்கப்பட்டது.இந்நிலையில் இந்தாண்டுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் பி.ஜி.,க்கு மட்டும் பதவி உயர்வுக்கான பேனல் தயாரிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதால் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநில தலைவர் அன்பரசன் கூறியதாவது:2023 கலந்தாய்வில் 54 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு வழங்க வேண்டியதில் பி.ஜி.,க்கு 7 சதவீத பங்கீடான 42 பேருக்கு தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் 2 சதவீதம் பங்கீட்டின்படி 12 உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை.இந்தாண்டும் தற்போது பி.ஜி.,க்கு மட்டும் பதவி உயர்வு பேனல் தயாரிக்கப்படும் நிலையில், உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பேனல் விவரம் இதுவரை கேட்கப்படவில்லை. இந்தாண்டும் புறக்கணிக்க திட்டமிடப்பட்டுள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளது.பதவி உயர்வில் 7:2 சதவீதம் விகிதாசாரத்தை பின்பற்ற தற்போதைய நிலையில் எவ்வித வழக்குகளும், தடை உத்தரவும் இல்லை. 2023ல் ஏற்பட்ட இழப்பை சரிசெய்து பாரபட்சமில்லா கலந்தாய்வை இந்தாண்டு கல்வித்துறை நடத்த வேண்டும் என செயலர், இயக்குநரிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.