உள்ளூர் செய்திகள்

பள்ளிக்கு முன் வைக்கப்படும் பேரிகார்டுகளால் அல்லல்: இரவு நேரத்திலும் தொடர்வதால் விபத்து

மாவட்டத்தில் 10 தாலுகாக்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. சில பள்ளிகள் மாநில நெடுஞ்சாலை ரோட்டோரமும், இணைப்பு சாலைகளிலும் அமைந்துள்ளன. இவற்றிற்கு பள்ளி நேரத்தில் மாணவர்களின் சாலை பாதுகாப்புக்காக ரோடுகளில் வேகத்தடை, பேரிகார்டுகள் வைக்கப்படுகின்றன. வேகத்தடையே போதும் என்கிற சூழலில் கூட சில பள்ளிகள் விளம்பர நோக்கத்திற்காக தங்கள் பெயரில் ஸ்பான்சர் செய்து பேரிகார்டுகளை போலீஸ்துறைக்கு அளித்து பள்ளிக்கு முன் வைக்க செய்கின்றனர்.இவ்வாறு வைக்கப்படும் பேரிகார்டுகள் இரவு 8:00 மணிக்கு பிறகும் தொடர்வதால் அப்பகுதிகளில் விபத்து அபாயம் தொடர்கிறது. சில பள்ளிகள் வேண்டும் என்றே தங்களின் விளம்பர பிளக்ஸ் போர்டுகளை ரோட்டோரம் வைத்து விட்டு அதை வாகன ஓட்டிகள் பார்க்க வேண்டும் என்ற விளம்பர நோக்கிற்காகவும் பேரிகார்டுகளை கேட்டு பெறுகின்றனர். தேவையில்லாமல் பள்ளிகள் முன்பு பேரிகார்டுகள் வைப்பது அதிகரித்து வருகிறது.இவை இரவு நேரங்களில் அகற்றப்படாததாலும், அவற்றின் மீது போதிய மிளிரும் விளக்குகள் இல்லாததாலும் மிகுந்த சிரமத்தை சந்திக்கும் சூழல் உள்ளது. தற்போது முதுகு தண்டுவட பாதிப்பு காரணமாக வேகத்தடைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இவற்றால் விபத்தும் ஏற்பட்டு வந்ததும் அகற்றுவதற்கு ஒரு காரணம். இதை கருத்தில் கொண்டு தேவையின்றி வைக்கப்பட்ட பேரிகார்டுகள் மீதும் கவனம் செலுத்த வேண்டும்.ஆகவே மாவட்ட போலீஸ் துறை இது தொடர்பாக ஆய்வு நடத்தி தேவையற்ற இடங்களில் பள்ளிகள் முன் வைக்கப்பட்ட பேரிகார்டுகளை அகற்றி இரவு நேர விபத்தை தடுக்க வேண்டும். வேகத்தடை போதும் என்றால் அதோடு முடித்து கொள்ளவும் அறிவுறுத்த வேண்டும். தேவைப்படும் இடங்களில் இரவு நேரத்தில் பேரிகார்டுகள் வைக்க கூடாது என எச்சரிக்கையோடு அனுமதி வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்