ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்ட பல்கலையில் எந்த பாகுபாடும் காட்டவில்லை: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: ''ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தில் நாங்கள் எந்த பாகுபாடும் காட்டவில்லை. இந்த பட்டமளிப்பு விழாவை கூட நாங்கள் புறக்கணிக்கவும் இல்லை,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த, தமிழ்நாடு ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலை பட்டமளிப்பு விழாவில், மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பட்டங்களை வழங்கி கவுரவித்தார். நடிகர் சிவகுமாருக்கு வாழ்நாள் சாதனைக்காக மதிப்புறு முனைவர் பட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:பட்டமளிப்பு விழாவிற்கு முதல்வராக, பல்கலை வேந்தராக மட்டுமல்ல, கலைஞன் என்ற முறையில் வந்துள்ளேன். நடிகர் சிவகுமார், ஓவியர் சந்துருவுக்கு மதிப்புறு முனைவர் பட்டங்களை வழங்கியதில் பெருமை அடைகிறேன். சிவகுமாருக்கு டாக்டர் பட்டம் மிகவும் பொருத்தமான ஒன்று. சிவக்குமார் புகழ்பெற்ற நடிகர் மட்டுமல்ல, நல்ல ஓவியர். சிறந்த சொற்பொழிவாளர். கருணாநிதிக்கு நெருக்கமானவர்.புறக்கணிக்கவில்லைஜெயலலிதா பெயர் சூட்டப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தில் நாங்கள் எந்த பாகுபாடும் காட்டவில்லை. இந்த பட்டமளிப்பு விழாவை கூட நாங்கள் புறக்கணிக்கவும் இல்லை. 2021ம் ஆண்டிற்கு இந்த பல்கலையை செழிப்பாக வளர்த்து இருக்கிறோம். இதுதான் நான் நிறுவ நினைக்கும் அரசியல் மாண்பு; இந்த மாண்பு தொடர வேண்டும். 2021ம் ஆண்டுக்கு பிறகு இந்த பல்கலை.,யில் நிறைய மாணவர்கள் சேர்ந்து இருக்கிறார்கள்.ரூ.5 கோடிபுதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்து, அதிக நிதியை ஒதுக்கி, ஆராய்ச்சி மையம் உட்பட பல அமைப்புகளை உருவாக்க நிதி வழங்கினோம். ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் ஊதியம் மற்றும் நிர்வாக செலவிற்கான மானியத்தொகை ரூ.3 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்படும்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் வளையங்குளத்தில் கிராமிய கலை பயிற்சி பள்ளி அமைக்க அரசின் சார்பில் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும். ஏஐ மூலம் பலரும் பாடல்கள், இசைகள், ஓவியங்கள் என உருவாக்குகின்றனர். அதனால் நமக்கான வாய்ப்புகள் குறைந்துவிடும் என்று நீங்கள் யாரும் கவலைப்படக் கூடாது.தொழில்நுட்பம்எவ்வளவு தான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், அதுவால் மனிதர்களின் சிந்தனைகளை வெல்ல முடியாது. தொழில்நுட்பத்தை நம்முடைய பலத்திற்கு நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.வித்தை தெரிந்தவர்களிடம் இருந்தால் தான் ஆயுதங்களுக்கே மதிப்பு. ஏஐ தொடர்பான கோர்ஸ்களை கற்றுக்கொள்ளுங்கள். இளைஞர்கள் அதிகம் போன் பார்க்கிறார்கள். சிலர் போதைப்பொருட்களை பயன்படுத்துகிறார்கள். இதுக்கு எல்லாம் கலைகள் மூலம் தீர்வு கொண்டு வர வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.