விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன தேசிய அறிவியல் மாநாடு இன்று துவக்கம்
புதுச்சேரி: சேலம், விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிகளில் வளர்ந்து வரும் போக்குகள் குறித்த 'தேசிய அறிவியல் மாநாடு' இன்று (10ம் தேதி)மற்றும் நாளை(11ம் தேதி) புதுச்சேரியில் நடக்கிறது.விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பல்வேறு துறைகளில் ஆராய்ச்சியில் வளர்ந்து வரும் போக்குகள் குறித்த இரண்டு நாள் தேசிய அறிவியல் மாநாடு புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் இன்று (10ம் தேதி) துவங்குகிறது.மாநாட்டிற்கு விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தர் கணேசன் தலைமை தாங்குகிறார். முதன்மை விருந்தினராக, பத்ம பூஷண் விருது பெற்ற பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் பலராம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.இதில், பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சுதிர், இணை துணை வேந்தர் சபரிநாதன், பதிவாளர் நாகப்பன் மற்றும் பிற மூத்த பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மாநாட்டில், 20 அழைக்கப்பட்ட உரைகள், 150 வாய்மொழி மற்றும் சுவரொட்டி விளக்கக்காட்சிகள் அளிக்கப்படுகிறது.