இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த கோரி தன்னார்வலர்கள் மனு
சேலம்: 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி, தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் நேற்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.இது குறித்து, 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தின் முன்னோடி தன்னார்வலர் ஸ்ரீமதி, 40, கூறியதாவது: இல்லம் தேடி கல்வி திட்டத்தில், சேலம் மாவட்டத்தில் 20 ஒன்றியங்களுக்கு தலா ஒரு முன்னோடி தன்னார்வலர் மற்றும் 3,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மாதம், 1,000 ரூபாய் மதிப்பூதியத்தில் பணியாற்றி வருகிறோம். கொரோனா காலங்களில் மட்டுமன்றி கடந்த, 5 ஆண்டுகளாக வீடு வீடாக சென்று குழந்தைகளுக்கு கல்வி கற்று தரும் பணியை செய்து வருவதால் கடந்த, 2 ஆண்டுகளாக சேலம் மாவட்டம் இத்திட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளது.கல்வி பணி மட்டுமின்றி, மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் வழங்குதல், சரி பார்த்தல், என அரசின் பல்வேறு திட்ட பணிகளை செய்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்துடன் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு, மார்ச் மாதத்தில் இருந்து தங்களுக்கு பணி ஏதும் வழங்கப்படவில்லை. எனவே, தமிழக முதல்வர் தலையிட்டு, 'இல்லம் தேடி கல்வி' திட்டம் தொடர்ந்து செயல்படவும், எங்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்துள்ளோம். இவ்வாறு கூறினார்.