பாட புத்தகங்களில் விடுபட்ட சுதந்திர போராட்ட தலைவர்கள்: தனிப்பாடங்கள் உருவாக்க கோரிக்கை
நாட்டின் விடுதலைக்காக தங்களது வாழ்வையே அர்ப்பணித்த பல சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்புகள், தற்போதைய சமச்சீர் பாடப்புத்தகங்களில் போதிய முக்கியத்துவம் பெறவில்லை. அவர்களின் வரலாற்றை மாணவர்கள் அறியும் வகையில் விரிவான தனிப்பாடங்கள் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.தமிழக அரசின் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ள சுதந்திர போராட்டம் குறித்த பாடங்களில், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார், வேலு நாச்சியார், திருப்பூர் குமரன் உள்ளிட்ட தலைவர்களுக்கு விரிவான தனிப்பாடங்கள் உள்ளன.ஆனால், கோவிந்தம்மாள், தியாகி என்.ஜி.ராமசாமி, எப்.ஜி.நடேச அய்யர் போன்ற பல தியாகிகளின் பங்களிப்புகள் பெயரளவிலோ அல்லது முற்றிலும் விடுபட்டோ உள்ளதாக கல்வியாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.நாடக மேடைகளை தேசப்பற்று பிரசார அரங்கமாக மாற்றியவர் தியாகி விஸ்வநாத தாஸ். தேசபக்திப் பாடல்கள் மற்றும் நாடகங்கள் மூலம் மக்களிடையே சுதந்திர உணர்வை ஏற்படுத்தியதற்காக பலமுறை ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டார். ஆனால், இவரைப் பற்றி விரிவான தகவல்கள் பாடப்புத்தகங்களில் இடம் பெறவில்லை.தீண்டாமைகோவையைச் சேர்ந்த தியாகி என்.ஜி.ராமசாமி, நெசவாலை தொழிலாளர்களை ஒருங்கிணைத்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடச் செய்தார். தொழிலாளர் உரிமை, தீண்டாமை ஒழிப்பு மற்றும் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கங்களில் தீவிரமாக செயல்பட்டார்.சிறை வாழ்க்கை மற்றும் உடல்நல பாதிப்புகளால் இளம் வயதிலேயே உயிரிழந்த இவரது தியாக வரலாறும் பாடத்திட்டங்களில் போதிய அளவில் இடம் பெறவில்லை.திருச்சி நகர்மன்றத் தலைவராகவும், நாடகக் கலைஞராகவும் விளங்கிய எப்.ஜி.நடேச அய்யர், காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு உப்பு சத்தியாகிரகம் மற்றும் ஒத்துழையாமை இயக்கங்களில் பங்காற்றினார். ஆனால், பள்ளி வரலாற்று பாடங்களில் இவரது பங்களிப்பு விரிவாக இடம் பெறவில்லை.மதுரையைச் சேர்ந்த பத்மாசனி அம்மாள், அந்நியத் துணி புறக்கணிப்பு, கள்ளுக்கடை மறியல் உள்ளிட்ட பல தேசிய இயக்கங்களில் பங்கேற்று பெண்களை விடுதலை போராட்டத்தில் ஈடுபடுத்தியவர். இவரது வரலாறும் பாடப்புத்தகங்களில் பெயரளவில் தான் இடம் பெற்றுள்ளது.முன்னோடிநேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தின், ராணி லட்சுமிபாய் பெண்கள் படையில் இணைந்து செயல்பட்ட கோவையைச் சேர்ந்த கோவிந்தம்மாள் பற்றிய தகவல்களும் தற்போதைய பாடப் புத்தகங்களில் சுருக்கமாக இடம் பெற்றுள்ளன.இந்திய தேசிய காங்கிரசின் ஆரம்பகால தலைவர்களில் ஒருவரான நீதிபதி எஸ்.சுப்பிரமணிய அய்யர், பெண்கள் சுதந்திரப் போராட்ட முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் அஞ்சலை அம்மாள், உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற தமிழ்ப் பெண்களில் ஒருவரான ருக்மணி லட்சுமிபதி.வெளிநாட்டில் இருந்து இந்திய விடுதலைக்காக செயல்பட்ட செண்பகராமன் பிள்ளை போன்றவர்களின் தகவல்கள் சிறிய குறிப்புகளாக மட்டுமே இடம் பெற்றுள்ளன. இவர்கள் குறித்து தனி தலைப்பாக விரிவான வரலாறு பாடப்புத்தகங்களில் இடம் பெறவில்லை.சுதந்திர போராட்ட வரலாறுகளை மாணவர்கள் முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில், விடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து புதிய தனிப்பாடங்கள் மற்றும் விரிவான குறிப்புகள் சேர்க்கப்பட வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.