காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரிக்கு சிறந்த கல்லூரி விருது
தமிழகத்தில் பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் சிறந்த கல்லூரிகளை தேர்வு செய்து பரிசு தொகை, சான்று வழங்கி கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்தும் திட்டத்தை மாநில அரசு முதன்முறையாக அறிமுகம் செய்துள்ளது. 100 கல்லூரிகள் போட்டி: இதற்காக சிறந்த கல்லூரிகளை தேர்வு செய்யும் குழுவில் உயர்கல்விக்கவுன்சில் துணை தலைவர் ராமசாமி தலைவராக உள்ளார். இக்கவுன்சில் சிறந்த கல்லூரிகள் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்குமாறு கோரியது. அந்த விண்ணப்பத்தில் 2006-07ம் கல்வி ஆண்டில் கல்லூரியில் உள்ள கட்டமைப்பு, மாணவர்கள் தேர்ச்சி விகிதம், கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலைபெற்ற மாணவர்கள் விபரம், ஆசிரியர்களின் தரம், ஆசிரியர்களின் வெளிநாட்டு கட்டுரைகள் வெளியீடு, ஆராய்ச்சி கட்டுரைகள் விபரம் போன்றவற்றை அனுப்புமாறு தெரிவித்தது. உயர்கல்வி கவுன்சிலுக்கு மாநில அளவில் 100 பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக், கலைகல்லூரிகள் விண்ணப்பித்தன. முதலிடம் பிடித்த கல்லூரிகள்: உயர்கல்வி கவுன்சில் குழுவினர் நடத்திய ஆய்வுக்கு பின் காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி, வல்லம் பெரியார் மணியம்மை பாலிடெக்னிக், சென்னை பிரசிடென்சி கலை கல்லூரி போன்றவை மாநிலத்தில் சிறந்த கல்லூரிகளாக தேர்வாகின. சிறந்த பொறியியல் கல்லூரிக்கான சான்றிதழ், ரூ.ஒரு லட்சம் பரிசு தொகையை செப்.,1ம் தேதி சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் கருணாநிதியிடம், காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் ஆர்.சுந்தரராஜன் பெற்றார். பொறியியல் கல்லூரியின் வளர்ச்சி: 1952ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி அழகப்பா செட்டியாரால் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளுடன் அழகப்பா பொறியியல் கல்லூரி துவக்கப்பட்டது. 1966ம் ஆண்டு இக்கல்லூரி அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது பி.இ., சிவில், மெக்கானிக், எலக்ட்ரிக்கல் உட்பட 5 பிரிவுகளும், எம்.இ., பிரிவில் 6 பாடப்பிரிவுகளும் உள்ளன; 2,500 மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். தொழில்நுட்ப கல்வித்தர மேம்பாட்டு நிதி ரூ.15 கோடியில் கல்லூரியில் அனைத்து துறைக்கும் லேப் வசதி, கட்டமைப்பு வசதிகள், இன்ட்ராநெட் வசதியுடன் கூடிய நூலக வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் தேர்ச்சி விகிதம்: 2006-07ம் ஆண்டில் 80 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று மாநில அளவில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 3 வது இடத்தில் இக்கல்லூரி தேர்ச்சி பெற்றது. இக்கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து ஆண்டு தோறும் 80 முதல் 88 சதவீதம் வரை தேர்ச்சி பெறுகின்றனர். அக்கல்வியாண்டு மட்டும் பி.இ., படித்த 340 பேரில் 240 பேரும், எம்.இ., படித்த 100 பேரில் 30 பேரும் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலை பெற்றனர். ஆய்வு கட்டுரைகள்: கல்லூரி பேராசிரியர்கள் 200 ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்டுள்ளனர். கல்லூரி மாணவ, மாணவிகளுக்கென தனித்தனியாக ஹாஸ்டல் வசதி, விளையாட்டில் மாநில, சென்னை அண்ணா பல்கலை., அளவில் நடைபெறும் போட்டிகளில் பதக்கம் பெற்றுள்ளனர். இது போன்று கல்லூரி பெற்றுள்ள பல்வேறு வளர்ச்சியை வைத்து தான் உயர்கல்வி கவுன்சில் இக்கல்லூரியை மாநிலத்தில் சிறந்த கல்லூரியாக தேர்வு செய்தது. கல்லூரி முதல்வர் ஆர்.சுந்தரராஜன் கூறுகையில், ‘தொழில்நுட்ப கல்வி தரமேம்பாட்டு திட்ட நிதி ரூ.15 கோடியில் கட்டடம், லேப், நூலகம் உள்ளிட்ட வசதிகளை செய்தோம். ஆண்டுதோறும் தேர்ச்சி சதவீதத்தை 80 முதல் 88 சதவீதம் வரை உயர்த்தியுள்ளோம். மாநிலத்தில் அதிக தேர்ச்சி சதவீதத்தில் தேர்ச்சி பெற்ற கல்லூரிகளில் 6 வது இடத்தில் உள்ளது. இக்கல்லூரி சிறந்தவையாக சான்று பெறுவதற்கு பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்களின் முழு ஒத்துழைப்பு இருந்தது’என்றார்.