கல்வி நிலையங்கள் சார்பில் ஓடும் பேருந்துகளுக்கு உரிமையாளர் யார் ?
குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களை கொண்ட பள்ளி, கல்லூரிகள், பேருந்து பராமரிப்பில் கவனம் செலுத்துகின்றன. ஆனால், அதிகப்படியான மாணவர்களை கொண்ட பள்ளி, கல்லூரிகளில், கூடுதல் பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களால், அவர்களால் சீரான பேருந்து வசதியை, தர இயலவில்லை. இதனால், அனேக பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு அனுமதி வாங்கி கொடுக்கின்றன. இதன் மூலம், பேருந்துக்கு உண்மையான உரிமையாளர் ஒருவர் என்றாலும், கல்வி நிறுவனங்கள், சட்டரீதியான உரிமையாளர் ஆகி விடுகின்றன. சில பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதல் பேருந்துகளை இயக்குவது இல்லை. எனினும், பெற்றோரின் கோரிக்கையை ஏற்று, மாணவ, மாணவியரின் நலனுக்காக, பெற்றோர் அழைத்து வரும், தனியார் பேருந்து உரிமையாளர்களிடம், பேருந்தை இயக்க அனுமதிக்கும் சூழ்நிலை உள்ளது. இதற்கு அனுமதி கொடுத்தாலும், கட்டண விஷயத்தில் கல்வி நிலையங்கள் தலையிடுவது இல்லை. பேருந்து கட்டணத்தை, தனியார் பேருந்து உரிமையாளர்களே கவனித்து கொள்கின்றனர். தனியார் பேருந்துகளுக்கு அனுமதி வாங்கினால், அதிக வரி செலுத்த வேண்டும்; மாணவர்களையும் ஏற்ற முடியாது. இதனால், பேருந்து உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரிகளின் பெயரில் அனுமதி வாங்குகின்றனர். கல்வி நிறுவனங்களும் மாணவர்களின் நலனுக்காக சம்மதிக்கின்றன. இதனால், ஒரு பேருந்துக்கு சட்டரீதியான உரிமையாளர் ஒருவர், உண்மையான உரிமையாளர் வேறு ஒருவர் என்ற நிலைமை ஏற்படுகிறது. இதுபோன்ற பேருந்துகளுக்கு அனுமதி கொடுப்பது, மோட்டார் வாகன சட்டப்படி தவறு. மோட்டார் வாகன ஆய்வாளர்களும், பள்ளி, கல்லூரி பேருந்துகளுக்கு யார் உண்மையான உரிமையாளர் என்பதை சோதனை செய்யாமல் கொடுத்து விடுகின்றனர். இந்த நிலையில், விபத்துகள் ஏற்பட்டால், பள்ளி, கல்லூரி நிர்வாகிகள் குற்றவாளியாக்கப் படுகின்றனர். கடந்த ஆண்டு, ஒரு பள்ளி மாணவி மரணத்துக்கு காரணமான பேருந்தின், உண்மையான உரிமையாளர் யோகேஸ்வரன் தான் என்பது, எப்.ஐ.ஆர்.,யில் குறிப்பிடப்பட்டிருந்ததையும், யோகேஸ்வரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்ததும் அனைவருக்கும் தெரிந்ததே. இந்த பேருந்துக்கு பள்ளி நிர்வாகத்தின் பெயரில் அனுமதி வாங்க, பெற்றோரின் கோரிக்கையை ஏற்று, பள்ளி நிர்வாகம் அனுமதி கொடுத்தது தவறே. இதனால், விபத்துகுள்ளான பேருந்துக்கு பள்ளி நிர்வாகி, சட்டப்படி உரிமையாளர் என்பதால், போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். எனவே, தமிழகத்தில், இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் தடுக்க, பள்ளி, கல்லூரி பேருந்துகளுக்கு அனுமதி கொடுக்கும் போது, அந்த வாகனங்களுக்கு உண்மையான உரிமையாளர் யார் என்பதை சோதனை செய்த பிறகே, அனுமதி கொடுக்க, போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.