கலை ஆசிரியர் தேர்வு நடத்தும் அறிவிப்பை அரசு வெளியிட வலியுறுத்தல்
ஊட்டி: கலை ஆசிரியர்களுக்கான தேர்வுகளை நடத்தும் அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில், ஓவியம், கலை, இசை உட்பட பயிற்சிகளை வழங்க பிரத்யேக சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் மூலம் கல்வி போதிக்கப்பட்டு வந்தது. தற்போது, சிறப்பாசிரியர் படிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு தேர்வு துறை மூலம், தொழில்நுட்ப தேர்வுகள் நடந்து வரும் நிலையில், கடந்த 2007ல் இருந்து, பள்ளி கல்வித் துறையால் நடத்தப்படும் தொழிலாசிரியர் சான்றிதழுக்கான படிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுக்க 55 ஆயிரம் பேர், தொழில் நுட்ப தேர்வுகளை எழுதி, பள்ளி கல்வித் துறை மூலம், நடத்தப்படும் டிடிசி தேர்வுகளை எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர். தவிர, கடந்த 2013ல், ஓவியம், தையல், இசை, உடற்கல்வி என, சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வாணையம் மூலம் 782 பணியிடங்களை நிரப்ப, ஒரு பணியிடத்துக்கு 5 பேர் வீதம், 3,110 பேர் அழைக்கப்பட்டு, அவர்களது சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. ஆனால், இதுவரை பணியிடங்கள் எதுவும் நிரப்பப்படவில்லை. இதனால், பல அரசுப் பள்ளிகளில், கலையாசிரியர், தொழிலாசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன; எனவே டிடிசி தேர்வுகளை நடத்தும் அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்கம் மாநில அரசை வலியுறுத்தி உள்ளது.