காலியாக உள்ள இடங்களை நிரப்பக் கோரி மாணவர்கள் மறியல் போராட்டம்
புதுச்சேரி: அரசு சட்டக் கல்லுாரியில் முதலாம் ஆண்டில் காலியாக உள்ள இடங்களை நிரப்பக் கோரி, மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி அரசு சட்டக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு சேர்க்கையில் 60 இடங்களில், 55 இடங்களுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கை நடந்தது. மீதமுள்ள 5 இடங்கள் நிரப்பப்படவில்லை. காலியாக உள்ள இந்த இடங்களில் மாணவர்களை சேர்க்கக் கோரி, சட்டக் கல்லுாரி மாணவர்கள், ராஜா தியேட்டர் சிக்னல் அருகே, திடீர் மறியலில் ஈடுபட்டனர். மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். பெரியக்கடை போலீசார், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உயரதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.