நம் விஞ்ஞானிகள் விரைவில் நிலவில் இறங்குவர்: இஸ்ரோ தலைவர் உறுதி
ராமேஸ்வரம்: விண்வெளியில் சாதிக்கும் நம் விஞ்ஞானிகள், நிலவில் விரைவில் தரை இறங்குவர் என இஸ்ரோ எனும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 92வது பிறந்த தினத்தையொட்டி, நேற்று ராமேஸ்வரத்தில், அப்துல் கலாம் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் சார்பில் நடந்த, சந்திரயான்- 3 வெற்றி விழாவில் பங்கேற்ற சோம்நாத் பேசியதாவது:நிலவின் தென் துருவத்தில் தரை இறங்க முடியுமா என, உலக நாடுகள் கேள்வி எழுப்பின. இன்று அதை நாம் செய்து, பல அறிய தகவலை பெறுகிறோம். சாதாரண குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் ராக்கெட் பொறியாளராகி, ஜனாதிபதியாக உயர்ந்தார்.அவர் விஞ்ஞானி மட்டுமல்ல; துறவி, தேசப்பற்று, கடவுள் நம்பிக்கை கொண்டவர். இதேபோல் நானும் சாதாரண கிராமத்தில் பிறந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் பள்ளி, கல்லுாரியில் படித்து அனைத்து சமூகத்தினரின் அன்பையும் பெற்றவன்.கடந்த, 1985ல் இஸ்ரோவில் சேர்ந்த நான், நேற்று சேர்ந்தது போல உணர்கிறேன். ஒரு முறை, ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி குறித்து ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாமிடம் விவரித்தோம். அவர் அடுத்தடுத்து பல கேள்விகள் கேட்டு பல அறிவுரைகள் வழங்கி, அடுத்த வெற்றிக்கு சில வழிகளை சொன்னார்.பிரதமர் மோடியிடம், நிலவில் சந்திரயான்- 3 இறங்கியதும் சொன்னோம். அதற்கு பிரதமர், நம் விஞ்ஞானிகள் எப்போது நிலவில் இறங்குவர் என கேட்டார். விரைவில் நம் விஞ்ஞானிகள் நிலவில் தரை இறங்குவர். இவ்வாறு அவர் கூறினார்.