உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளிகளை புதுப்பிக்க உத்தரவு; பேரூராட்சி நிர்வாகங்கள் குழப்பம்

சென்னை: அடுத்த மாதம், 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என, பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், அரசு பள்ளிகளை மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.அவ்வகையில், பேரூராட்சிகளின் எல்லையில் உள்ள பள்ளி கட்டட மராமத்து பணிகளை மேற்கொள்வது தொடர்பாக, விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க, பேரூராட்சிகளின் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.பேரூராட்சி அதிகாரிகள் சிலர் கூறியதாவது:தமிழகத்தில், 490 பேரூராட்சிகள் உள்ளன. அவற்றின் எல்லையில் உள்ள துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் அனைத்தும், அந்தந்த ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாடு மற்றும் பராமரிப்பில் உள்ளன.மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் அனைத்தும், பொதுப்பணித் துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளன. பள்ளிகளில் புதிய கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை, அந்தந்த துறையினர் தான் மேற்கொண்டு வருகின்றனர்; செலவினங்களையும் அவர்களே ஏற்கின்றனர்.அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியரிடம் தடையில்லா சான்று பெற்று, பள்ளி கட்டடங்களை மேம்படுத்துவது, புனரமைப்பது தொடர்பான பணிகளை மேற்கொள்ள, இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.ஏற்கனவே பல இடங்களில், ஊராட்சி ஒன்றியம் மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி கட்டடங்களுக்கு, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தான் மின் இணைப்பு வழங்கப்பட்டு, மின் கட்டணமும் செலுத்தப்படுகிறது. தணிக்கையாளர்கள் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர்.பேரூராட்சி இயக்குனரக உத்தரவின்படி, ஊராட்சி ஒன்றிய மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி வளாகங்களில், புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் போது, அக்கட்டடங்கள் மற்றும் கட்டுமானங்களை தொடர்ந்து பராமரிக்க வேண்டிய பொறுப்பும், அதற்காகும் நிதி செலவினத்தையும், பேரூராட்சி நிர்வாகங்களே ஏற்க வேண்டியிருக்கும்.ஆண்டு தணிக்கையின் போது, இது ஆட்ேசபனைக்குள்ளாகும்; அந்தந்த பேரூராட்சி செயல் அலுவலர்களே பொறுப்பேற்க வேண்டிய நிலை வரும்.இதுபோன்ற நிர்வாக ரீதியான சிக்கல், குழப்பம் ஏற்படாமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் அல்லது பள்ளிகளை நிர்வகிக்கும் அந்தந்த துறையினரிடமே, அவற்றை மேம்படுத்தும் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்