கல்லுாரியில் ரிப்போர்ட் செய்யாவிட்டால் சீட் ரத்தாகிவிடும்: சென்டாக்
புதுச்சேரி: முதற்கட்ட கணினி கலந்தாய்வில் சீட் கிடைத்த மாணவர்கள், விரும்பிய கல்லுாரிகளில் சீட்டினை தேடும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய கவுன்சிலிங் நடைமுறைகளை, சென்டாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கலை அறிவியல், வணிகவியல், பி.டெக்., உள்ளிட்ட நீட் அல்லாத படிப்புகளான முதற்கட்ட கணினி கலந்தாய்வு நடத்தி 7,080 பேருக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது.ஆனால், கோர்ட் உத்தரவு காரணமாக சென்டாக் திடீரென இந்த கலந்தாய்வு சீட்டுகளை நிறுத்தி வைத்துள்ளது. ஒரிரு தினங்களில் மீண்டும் நீட் அல்லாத படிப்புகளுக்கு சீட்டுகளை ஒதுக்க திட்டமிட்டுள்ளது.வழக்கமாக, எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு முதலில் கவுன்சிலிங் நடத்தப்படும். மருத்துவ படிப்பு கனவு தகர்ந்த மாணவர்கள், இன்ஜினியரிங், துணை மருத்துவ படிப்புகளில் அடுத்த வாய்ப்புகளை தேடுவர்.ஆனால், தற்போது இன்ஜியரிங் உள்ளிட்ட நீட் அல்லாத படிப்புகளுக்கு முதலில் கவுன்சிலிங் நடைமுறைகள் துவங்கியுள்ளதால், தங்களது கிடைத்த சீட்டினை என்ன செய்வது என்று தெரியாமல் மாணவர்கள குழப்பத்தில் உள்ளனர். இதேபோல் விரும்பிய கல்லுாரியில் சீட் கிடைக்காத மாணவர்களும் வேறு கல்லுாரிகளில் சீட்டினை எதிர்நோக்கி காத்துள்ளனர்.இதற்கிடையில் கவுன்சிலிங் நடைமுறைகள் குறித்து சென்டாக் அதிகாரிகள் கூறியதாவது:சென்டாக் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, கல்லுாரியில் சேர்க்கைக்காக ஐந்து நடைமுறை வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.முதற்கட்ட கவுன்சிலிங்கில் சீட் ஒதுக்கப்பட்டால் முதலில் அலாட்மெண்ட் கடிதத்தை டவுண்லோடு செய்து, ஒதுக்கப்பட்ட கல்லுாரிக்கு சென்று ரிப்போர்ட் செய்ய வேண்டும். கல்லுாரிகளிடம் அனைத்து ஒரிஜனல் சான்றிதழ்கள் மற்றும் கட்டணத்தை செலுத்தி சேர வேண்டும். அந்த கல்லுாரியில் சீட் கிடைத்ததை உறுதி செய்து கொண்டு அட்மிஷன் கடிதத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.அந்த மாணவர்கள், இனி எந்த கல்லுாரியும், படிப்பும் தேவையில்லை, அந்த படிப்பிலேயே தொடருவதாக இருந்தால் அடுத்த ரவுண்ட் கவுன்சிலிங்கில் பங்கேற்க தேவையில்லை.இரண்டாவது வாய்ப்பை பொருத்தவரையில், மேற்கூறிய அதே நடைமுறை களை பின்பற்றி கல்லுாரி சேர்ந்துவிடலாம். தற்போது ஒதுக்கப்பட்ட படிப்பு பிடிக்கவில்லையென்றால் இரண்டாவது ரவுண்டில் கல்லுாரி, பாடப்பிரிவுகளை முன்னுரிமை கொடுத்து விட்டு, சீட் கிடைப்பதற்காக காத்திருக்கலாம்.மூன்றாவது வாய்ப்பினை பொருத்தவரை, முதற்கட்ட கலந்தாய்வில் ஒதுக்கப்பட்ட கல்லுாரி, சீட் பிடிக்கவில்லையென்றால், அந்த சீட்டினை தேவையில்லை என்று நிராகரிக்கலாம். கல்லுாரிக்கு சென்று ரிப்போர்ட் செய்ய தேவையில்லை. அடுத்த சுற்று கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.நான்காவது வாய்ப்பு என்பது, இதுவரை எந்த கல்லுாரியிலும் சீட் கிடைக்காதவர்களுக்கானது. இவர்கள் அடுத்த இரண்டாம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்க காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை.ஐந்தாவது வாய்ப்பு, இருமனது உடையவர்க ளுக்கு. சீட் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் அவர்களுக்கு சேர விருப்பம் இல்லையென்றால் எந்த சுற்று கவுன்சிலிங்கிலும் பங்கேற்காமல் வெளியேறலாம்.ஆனால், கணினி கலந்தாய்வில் அலாட்மெண்ட் கடிதம் கிடைத்த பிறகு, அதனை டவுண்லோடு செய்து சீட் கிடைத்த கல்லுாரியில் கண்டிப்பாக 'ரிப்போர்ட்' செய்ய வேண்டும். அப்படி ரிப்போர்ட் செய்யவில்லையென்றால் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள சீட் தானாகவே ரத்தாகிவிடும். இவ்வாறு சென்டாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.