மக்கள் தொடர்பியல் துறை வேலைவாய்ப்பு களப்பயணத்தில் அறிந்த பள்ளி மாணவர்கள்
ஓமலுார்: சேலம், கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மாதிரிப்பள்ளி மாணவர்கள், 100க்கும் மேற்பட்டோர், களப்பயணமாக பெரியார் பல்கலைக்கு வந்து இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையின் செயல்பாடு, அதன் வேலைவாய்ப்பு குறித்து அறிந்து கொண்டனர்.அரசு பள்ளி மாணவர்களின் வாழ்க்கை உயர்வுக்கு வழிகாட்டும்படி, வேலைவாய்ப்பு குறித்து அறிய, துறைசார் களப்பயணங்களை அரசு ஊக்குவிக்கிறது. அதன்படி சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த அரசு மாதிரி பள்ளி மாணவர்கள், 100க்கும் மேற்பட்டோர், சேலம் பெரியார் பல்கலைக்கு வந்தனர்.அங்கு இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையின் ஊடகம் சார்ந்த செயல்பாடுகளை பார்வையிட்டனர். அப்போது துறைசார் வேலைவாய்ப்பு குறித்து, துறைத்தலைவர் நந்தகுமார், டிவி நிகழ்ச்சி ஒளிபரப்பு குறித்து இணை பேராசிரியர் சுப்பிரமணி விளக்கம் அளித்தனர். டிவி, ஒலிப்பதிவு, தொகுப்பு பணிகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. துறை மாணவர்கள் சார்பில் வெளியாகும், கண்ணாடி இதழ் உருவாக்கம் குறித்து விளக்கப்பட்டது. பள்ளி மாணவர்களுடன், இத்துறையின் முன்னாள் மாணவர்களும் கலந்துரையாடினர்.இந்த களப்பயண நிகழ்வை, இதழியல் துறை சார்பில் முனைவர் தமிழ்ப்பரிதி, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மாதிரிப்பள்ளிகள் சார்பில் ஆசிரியர்கள் தமிழ்செல்வன், முருகேசன், பாபு ஒருங்கிணைத்தனர்.