திடக்கழிவுகளை அப்புறப்படுத்த புது வழி; அரசுடன் சென்னை ஐ.ஐ.டி., கைகோர்ப்பு
சென்னை: திடக்கழிவுகளை அறிவியல்பூர்வமாக கையாளவும், மறுசுழற்சி செய்யவும், துாய்மை தமிழ்நாடு நிறுவனம் மற்றும் சென்னை ஐ.ஐ.டி., இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.தமிழகத்தில், நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் நாள்தோறும் உருவாகும் திடக்கழிவுகளை மேலாண்மை செய்வதற்காக, துாய்மை இயக்கம் என்ற புதிய திட்டத்தை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை துவங்கியுள்ளது.இந்த திட்டத்தை செயல்படுத்த, துாய்மை தமிழ்நாடு நிறுவனம் என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டு உள்ளது.மாநிலம் முழுதும் உருவாகும் திடக்கழிவுகளை, அறிவியல்பூர்வமாக அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சரியான முறையில் கையாளவும், அவற்றை மறுசுழற்சி செய்யவும், வலுவான ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.இப்பணிகளை, சென்னை ஐ.ஐ.டி., உயர் கல்வி நிறுவனத்துடன் இணைந்து, துாய்மை தமிழ்நாடு நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இதற்காக, இவ்விரு நிறுவனங்கள் இடையே, நேற்று முன்தினம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், துாய்மை தமிழ்நாடு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உமா, சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.திடக்கழிவு மேலாண்மையில் எதிர்கொள்ளும் சவால்களை களைவதற்கும், உயர் தொழிற்நுட்பத்தின் வாயிலாக, சுற்றுச்சூழல் விதிமுறை களுக்கு உட்பட்டு மறுசுழற்சி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகை செய்யும்.நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி, தலைமை செயலர் முருகானந்தம், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.