பள்ளி பருவத்தில் இருந்தே புத்தக வாசிப்பு அவசியம்! கலெக்டர் அட்வைஸ்
திருப்பூர்: “பள்ளி பருவத்தில் இருந்தே, தினமும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்,” என, கலெக்டர் மனிஷ் நாரணவரே பேசினார்.தமிழக அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், நுாலகத்துறை மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் சார்பில், 22வது 'திருப்பூர் புத்தக திருவிழா 2026' நேற்று வேலன் ஓட்டல் வளாகத்தில் துவங்கியது.துவக்க விழாவுக்கு, கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்து பேசியதாவது:இக்கண்காட்சி, 150 ஸ்டால்களுடன், 10 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களுடன் அமைந்துள்ளன. பத்து அரசுத்துறை சார்ந்த கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவியர் 'பள்ளி பருவத்தில் இருந்தே, தினமும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மொபைல் போனில் நேரத்தை செலவிடாமல், பயனுள்ள வகையில் படிக்க வேண்டும். வீட்டுக்கு, புத்தகம் வாங்கி சென்றால் மட்டும் போதாது; தினமும் புத்தகங்களை படிக்க வேண்டும். பள்ளி குழந்தைகள், பாடப்புத்தகத்தை மட்டும் படித்தால் போதாது, பயனுள்ள புத்தகங்களை தேர்வு செய்து படித்தால், வாழ்வில் முன்னேறலாம்.மாவட்ட நிர்வாகம், புத்தக வாசிப்பை ஊக்குவிக்க, வாசிப்பு இயக்கம் நடத்தி வருகிறது. போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளவும், நாட்டு நடப்தை அறியவும், வாசிப்பு வழக்கம் அவசியம். மாணவ, மாணவியர் பெற்றோருடன் வந்து, தினமும் கண்காட்சியை பார்வையிட வேண்டும். மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளும், கண்காட்சியை பார்வையிட, பள்ளிக்கல்வித்துறை வாயிலாக ஏற்பாடு செய்யப்படும்.இவ்வாறு, கலெக்டர் பேசினார்.விழாவில், டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் வரவேற்றார். ஆர்.டி.ஓ. சிவப்பிரகாஷ், மாவட்ட நுாலக அலுவலர் ராஜன், மேயர் தினேஷ்குமார், மண்டல தலைவர்கள் கோவிந்தசாமி, கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். கண்காட்சியை, கலெக்டர் மனிஷ் நாரணவரே திறந்து வைத்து, கண்காட்சி அமைப்பாளர்களுடன் சென்று, புத்தக கண்காட்சிகளை பார்வையிட்டார்.தாமரை பிரதர்ஸ் மீடியா அரங்கு புத்தக கண்காட்சியின், 22 வது ஸ்டாலில், 'தினமலர்' நாளிதழ் சார்பில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தாமரை பிரதர்ஸ் மீடியா சார்பில் வெளியிடப்பட்ட, 125 தலைப்புகளிலான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள் இக்கண்காட்சி அரங்கை, நேற்று ஆவலுடன் பார்வையிட்டனர். தாமரை பிரதர்ஸ் மீடியா வெளியிட்ட புத்தகங்களை வாங்க, 1800 425 7700 என்ற 'டோல் ப்ரீ' எண், 75500 09565 மற்றும் 98940 09613 என்ற வாட்ஸ் ஆப் எண்களிலும், www.vaasagarvattam.com என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.