உள்ளூர் செய்திகள்

முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிந்து வர விதிக்கப்பட்ட தடை நீக்கம்

பெங்களூரு: பள்ளி, கல்லுாரிகளுக்கு முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிந்து வர விதிக்கப்பட்ட தடையை, கர்நாடக காங்., அரசு நீக்கி உள்ளது.கர்நாடகாவின் உடுப்பியில் உள்ள அரசு பி.யு., கல்லுாரியில், கடந்த 2021ம் ஆண்டு முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிந்து வந்ததால், அவர்களை கல்லுாரிக்குள் நுழைய நிர்வாகம் தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவியர், முஸ்லிம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.'கல்லுாரி வளாகத்திற்குள் ஹிஜாப் அணிந்து வரலாம்; வகுப்பறையில் சீருடை மட்டும் அணிய வேண்டும்' என, கல்லுாரி நிர்வாகம் கூறியதை ஏற்க மறுத்தனர். ஹிஜாப் அணிந்து வரும் மாணவியருக்கு போட்டியாக, ஹிந்து மாணவ, மாணவியர் காவி துண்டு அணிந்து வகுப்புகளுக்கு வந்ததால் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. இதனால் அப்போதைய பா.ஜ., அரசு, கல்வி நிறுவனங்களில் சீருடை மட்டும் அணிவதை கட்டாயமாக்கி, மத ரீதியிலான ஆடைகளை அணிய தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அரசின் உத்தரவை நீதிமன்றம் உறுதி செய்தது.இந்நிலையில், கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை நேற்று பிறப்பித்த உத்தரவு: கர்நாடக கல்வி சட்டம், 1983 விதிகளின் கீழ், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய கூடாது என, 2022ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு திரும்ப பெறப்படுகிறது. மாணவர்கள் பள்ளி சீருடைகளுடன் ஹிஜாப் அணிந்து வரலாம்.அது மட்டுமின்றி, மத சின்னங்களை அடையாளப்படுத்தும் பூணுால், சிவதாரா, ருத்ராட்சம் ஆகியவற்றையும் அணிந்து வரலாம். இவற்றை அணிந்து வரும் மாணவ, மாணவியர் வகுப்பறைக்குள் வர அனுமதி மறுக்க கூடாது. மத சின்னங்களை அணியுமாறும், அகற்றுமாறும் எந்த மாணவரையும் கட்டாயப்படுத்த கூடாது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்