இன்ஜி., மாணவர்களின் தேர்ச்சி விபரங்கள்; ஆராய அண்ணா பல்கலை திட்டம்
சென்னை: இன்ஜினியரிங் மாணவர்களின் தேர்ச்சி முடிவுகளை மேம்படுத்த, புள்ளி விபரங்கள் சேகரிக்க, அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது.அண்ணா பல்கலையின் கீழ், 457க்கும் அதிகமான இன்ஜினியரிங் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. இதில், 151 தன்னாட்சி கல்லுாரிகளும், 306 தன்னாட்சி பெறாத கல்லுாரிகளும் அடங்கும்.இந்த கல்லுாரிகளில், 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, இன்ஜி., படிக்கும் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருகிறது.இந்நிலையில், 24 இன்ஜினியரிங் கல்லுாரிகளை சேர்ந்த 2,425 மாணவர்கள், 2021 - 25 கல்வியாண்டுகளில் நடந்த செமஸ்டர் தேர்வுகளில், ஒன்றில் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.இந்த சூழலில், ஒவ்வொரு செமஸ்டர் தேர்வின் போது, மாணவர்களின் தேர்ச்சி சதவீதங்களை ஆய்வு செய்ய, பல்கலை முடிவு செய்துள்ளது. இந்த ஆய்வின் அடிப்படையில், எந்தெந்த பாடப்பிரிவுகளில் மாணவர்கள் பின்தங்கி உள்ளனர்; எத்தனை கல்லுாரிகளில் மோசமான தேர்ச்சி உள்ளது என்பதை அறிய முடியும் என, பல்கலை அதிகாரிகள் தெரிவித்தனர்.