ரேஷன் கார்டுக்கு போலி ஆவணம் இன்ஜினியரிங் பட்டதாரி கைது
திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்ட வழங்கல் அலுவலர் பாவேந்தன் தலைமையிலான குழுவினர், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்களை ஆய்வு செய்தனர்.அதில், திண்டிவனம் காமாட்சியம்மன் கோவில் தெருவில் உள்ள தனியார் காஸ் ஏஜன்சி ரசீது மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றில் 'போட்டோஷாப்' வாயிலாக திருத்தம் செய்து, போலியாக பலர் விண்ணப்பித்திருப்பது தெரிந்தது.அதில், பெலாக்குப்பம், நண்பர்கள் காலனியை சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி மகேஸ்வரி, 29, என்பவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் பெயரில் காஸ் இணைப்பு இல்லாத போதும், அவரது பெயரில் காஸ் இணைப்பு உள்ளதாக போலி ஆவணம் தயாரிக்கப்பட்டது தெரிந்தது.நகராட்சி அலுவலக வளாகத்தில் கம்ப்யூட்டர் சென்டர் வைத்துள்ள, திண்டிவனம், சதீஷ்குமார், 38, அதை தயாரித்து கொடுத்ததும், இதேபோல, 9 பேருக்கு கொடுத்திருப்பதும் தெரிந்தது.இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலர் பாவேந்தன் அளித்த புகாரின் படி, திண்டிவனம் போலீசார், போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்த பிரிவில் வழக்கு பதிந்து, சதீஷ்குமாரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.