உள்ளூர் செய்திகள்

சிறப்பு வகுப்புகளில் கவனம் செலுத்த மாநகராட்சி திட்டம்

கோவை: பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. 17 மாநகராட்சி மேல்நிலை பள்ளிகளில் இருந்து, 563 மாணவர்கள், 1,068 மாணவியர் என, 1,631 பேர் தேர்வு எழுதியிருந்தனர்.இதில், 490 மாணவர்கள், 1,010 பெண்கள் என, 1,500 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு, 95.71 ஆக இருந்த தேர்ச்சி சதவீதம் இந்தாண்டு, 91.97 சதவீதமாக குறைந்துள்ளது. ஒரு பள்ளி கூட, 100 சதவீதம் தேர்ச்சி பெறவில்லை.வணிகவியல் உள்ளிட்ட பாடங்களில், 26 மாணவர்கள், 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்நிலையில், ஆர்.எஸ்., புரம், மாநகராட்சி கலையரங்கில் நேற்று மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தலைமையில், மாநகராட்சி கல்வி அலுவலர்(பொ) சேவியர், தலைமை ஆசிரியர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.அப்போது, பிளஸ் 2 தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கை குறித்து கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. தொடர்ந்து, படிப்பில் பின்தங்கிய மாணவர்களை சிறப்பு வகுப்புகள் வாயிலாக மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்