புகார் அளித்தால் உங்கள் அடையாளம் தெரியாமல் நடவடிக்கை எடுக்கப்படும்
கோவை: கோவை மாநகர போலீசாரின், போலீஸ் அக்கா திட்டம் குறித்த குறும்படம் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், புகார் அளிக்க மாணவியர் தயங்கக்கூடாது என்று தைரியமூட்டினார்.கல்லுாரி மாணவியர் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு சட்ட ரீதியாகவும், சுமூகமான முறையிலும், பிரச்னையின் தீவிரத்தை பொருத்து நடவடிக்கை எடுக்க உதவி செய்யும் வகையில், கோவை போலீசாரின் 'போலீஸ் அக்கா' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, கோவை என்.ஜி.பி., கல்லுாரியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், போலீஸ் அக்கா திட்டம் குறித்த குறும்படம் வெளியிடப்பட்டது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர்கள் ஸ்டாலின், சுகாசினி, என்.ஜி.பி., கல்லுாரி செயலாளர் தவமணி, இயக்குனர் மதுரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசுகையில், சமூக வலைதளங்கள் வாயிலாக பல பிரச்னைகள் எழுகின்றன. அப்படி எழும் பிரச்னைகளுக்கு தீர்வு அளிப்பது தான் போலீசின் பணி. மாணவியர் பலர் தங்களுக்கு நடக்கும் துன்புறுத்தல்கள், பிரச்னைகளை வெளியில் சொல்ல தயங்குகின்றனர்.அவர்களின் அடையாளம் வெளியில் தெரியாமல், சட்ட ரீதியாக அல்லது வேறு வழிகளிலும் தீர்வு காண உதவுவதுதான் போலீஸ் அக்காவின் பணி.புகார் அளிப்பதால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என, மாணவியர் அச்சப்பட வேண்டாம். யார் தகவல் கொடுத்தது, எந்த பகுதியை சேர்ந்தவர், என்ன புகார் என எதையும் குறிப்பிடாமல் நடவடிக்கை எடுக்கப்படும். சில புகார்களுக்கு எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படும். அதிலும், மாணவியின் அடையாளங்கள் பாதுகாக்கப்படும், என்றார்.என்.ஜி.பி., கல்லுாரி தலைவர் நல்ல பழனிசாமி பேசுகையில், இக்கால இளைஞர்களுக்கு வழி காட்டுவது கடினம். கோவை மாநகர போலீசார் பல்வேறு வகையில் வழிகாட்டுகின்றனர். மாணவர்கள் ஒவ்வொருவரும் சட்டத்தை பின்பற்ற வேண்டும். கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். தற்காப்பு மிக முக்கியம். மாணவியர் தங்களை தற்காத்துக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும், என்றார்.