உள்ளூர் செய்திகள்

கையேந்தியது பள்ளி கல்வித்துறை; சிக்கலில் பெற்றோர்-ஆசிரியர் கழகம்

இந்த அமைப்பிடம் இருந்து பள்ளிக் கல்வித்துறை கடனாக வாங்கிய ஒரு கோடி ரூபாய்க்கும் மேலான தொகையை இதுவரை திருப்பிச் செலுத்தவில்லை. பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் நிதியை வேறு துறைக்கு வழங்குவதற்குத் தணிக்கையில் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், இந்தப் பிரச்னையால் எப்போது ஆபத்து வருமோ என பெற்றோர் ஆசிரியர் கழக அலுவலர்கள் ‘கிலி’யில் உள்ளனர். தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்ட மாநில பெற்றோர்-ஆசிரியர் கழகம், தன்னாட்சி அதிகாரத்துடன் தனி அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது. சென்னை கல்லூரி சாலையில் உள்ள டி.பி.ஐ., வளாகத்தில் இதன் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. பள்ளி வளர்ச்சிக்கும், கல்வி வளர்ச்சிக்கும் பாடுபடுவது தான் இந்த அமைப்பின் தலையாய நோக்கம். மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் கழகங்களுக்கு அமைப்பின் விதிமுறைகளை விளக்கி, பள்ளி வளர்ச்சிக்குப் பாடுபடுவது குறித்துத் தேவையான ஆலோசனைகளை மாநில பெற்றோர்-ஆசிரியர் கழகம் வழங்குகிறது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினா-விடை புத்தகங்கள் மற்றும் தீர்வுப் புத்தகங்களை அச்சிட்டு விற்பனை செய்வதன் மூலம், மாநில அமைப்பிற்கு லட்கணக்கில் வருவாய் வருகிறது. இந்த நிதியை வேறு அரசுத் துறைகளுக்கு வழங்க விதிமுறைகளில் இடமில்லை. ஆனாலும், பள்ளிக்கல்வித்துறை, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பல ஆண்டுகளாக மாநில பெற்றோர்-ஆசிரியர் கழகத்திடம் கடனாக பல லட்சம் ரூபாயை வாங்கியுள்ளது. பள்ளிக்கல்வித் துறை இயக்குனர்களாகப் பதவி வகித்த பரமசிவன், மாரியப்பன், கண்ணன் ஆகியோரது பதவிக்காலங்களில் அதிகளவு நிதி கடனாக வாங்கி செலவழிக்கப்பட்டுள்ளது. ‘பள்ளிக் கல்வி’ இணைய தளம் ஏற்படுத்துவதற்காக 50 லட்சம் ரூபாயை தற்போது பள்ளிக்கல்வித் துறை வாங்கியுள்ளதாகப் பெற்றோர்-ஆசிரியர் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக கடன் வாங்கியுள்ளதாகவும், இதுவரை ஒரு பைசா கூட திருப்பித் தரவில்லை என்றும் அதிகாரிகள் குமுறுகின்றனர். பள்ளிக்கல்வி இணையதளத்தை நிர்வகிக்கும் பொறுப்பை பெற்றோர்-ஆசிரியர் கழகத்திடம் அரசு வழங்கியுள்ளது. ‘நிர்வகிக்கும் பணிகள் தொடர்பாக நியமனம் செய்யப்பட உள்ள பணியாளர்களுக்கு, பெற்றோர்-ஆசிரியர் கழகம் தான் சம்பளம் கொடுக்க வேண்டும்’ என இப்போதே பள்ளிக்கல்வித் துறை நெருக்கடி கொடுத்து வருவதாகத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. பள்ளிக்கல்வித் துறை இயக்குனராகப் பதவி வகிப்பவர், பெற்றோர்- ஆசிரியர் கழகத்தின் துணைத் தலைவராக இருக்கிறார். அப்படியிருக்கும் போது, பள்ளிக்கல்வித் துறை பணம் கேட்கும் போது, இல்லை என்று கூற முடியாமல், பெற்றோர்-ஆசிரியர் கழகச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள், நிதி வழங்குவதற்கு அனுமதி கொடுத்து விடுகின்றனர். அதன் பிறகு புலம்பித் தவிக்கின்றனர். ‘பெற்றோர்-ஆசிரியர் கழக நிதியை வேறு துறைக்கு வழங்க விதிமுறைகளில் இடம் இல்லாதபோது, பள்ளிக்கல்வித் துறைக்கு எப்படி இவ்வளவு பணத்தை வழங்கலாம்? எப்படி அனுமதி கொடுத்தீர்கள்?’ என தணிக்கையில் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்துள்ளனர். இதனால், பெற்றோர்-ஆசிரியர் கழகத்தில் பெரும் புயல் ஏற்பட்டுள்ளது. பெற்றோர்-ஆசிரியர் கழகத்தைச் சுயமாகச் செயல்படவிடாமலும், அதன் நிதியைப் பள்ளிக்கல்வித் துறை உள்ளிட்ட வேறு கல்வித்துறைகள் பயன்படுத்தும் போக்குத் தொடர்ந்தாலும் பெரிய பிரச்னை வெடிக்கும் என்றும், அதனால் தங்களது பதவிக்கு ஆபத்து வரலாம் என்றும், துறை அலுவலர்கள் ‘கிலி’யில் உள்ளனர். முறைகேடுகளுக்கு அறிகுறி? பள்ளியில் செயல்படும் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு, ஆண்டுக்கு இரண்டு முறை கூட வேண்டும் என்றும், வரவு-செலவு கணக்குகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் மாநில பெற்றோர்-ஆசிரியர் கழகம் கூறுகிறது. இந்த விதிகளும், நடைமுறைகளும் மாநிலத் தலைமைக்கு இல்லையா? என்ற கேள்வி எழுகிறது. பொதுக்குழுக் கூடாமல், வரவு-செலவுகளை ஆராயாதப் போக்குத் தொடருமானால் அது முறைகேடுகளுக்கு வழி வகுத்து விடும். பொதுக்குழு கூடி 8 ஆண்டான அவலம் மாநில பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் தலைவராக அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித் துறைச் செயலர் குற்றாலிங்கம், பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் பெருமாள்சாமி, தொடக்கக் கல்வி இயக்குனர் தேவராஜன் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும் இருக்கின்றனர். இந்த அமைப்பின் உறுப்பினர்களாக 120க்கும் மேற்பட்டோர் உள்ளனர். கடந்த தி.மு.க., ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக அன்பழகன் பதவி வகித்தபோது 2000ம் ஆண்டில் பெற்றோர்-ஆசிரியர் கழகப் பொதுக்குழு கூடியுள்ளது. அதற்குப்பிறகு இன்றைய தேதி வரை பொதுக்குழு கூடவில்லை. எட்டு ஆண்டுகளாக பொதுக்குழுவைக் கூட்டாததால் வரவு-செலவு கணக்குகள் குறித்தும் விவாதிக்கப்படவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் கல்வித்துறை அமைச்சர் பதவியில் இருந்த தம்பிதுரை, செம்மலை, சண்முகம் ஆகியோரிடம் பொதுக்குழுவைக் கூட்டுவது குறித்து தெரிவிக்கப்பட்டபோதும், அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதே நிலை தற்போதைய ஆட்சியிலும் நீடிப்பதாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்