பள்ளிகள் தோறும் சிறப்பு முகாம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
பள்ளிகள் தோறும் மாணவர்களுக்கு யோகா, மருத்துவபரிசோதனை, பிசியோதெரபி முகாம்களை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு முகாம்களை நடத்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 8 முதல் 14 வரை யோகா கல்வி முகாம் நடத்தப்படவுள்ளது. வேதாத்திரி மகரிஷி மனவளக்கலை மன்ற யோகா பயிற்றுனர்கள் பயிற்சியளிக்க உள்ளனர். மாணவிகளுக்கு பெண் பயிற்சியாளர்கள் மூலம் யோகா கறப்பிக்கப்படவுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், சுகாதாரத்துறை இணை இயக்குனர்களை தொடர்பு கொண்டு மருத்துவ பரிசோதனை முகாம்களை ஜூலை 19 க்குள் நடத்த தெரிவிக்கப்பட்டுள்ளது. "சுகாதாரம் இணை இயக்குனர், அனைவருக்கும் கல்வி இயக்க பிசியோதெரபி மருத்துவ திட்ட வல்லுனர்களை கொண்டு, பிசியோதெரபி வழங்க வேண்டிய மாணவர்களை கண்டறிந்து, ஜூலை 27 க்குள் பயிற்சி வழங்க வேண்டும். இதற்கான செலவுகளை பள்ளி சிறப்பு கட்டண குவிப்பு நிதியில் செலவு செய்து கொள்ளலாம். முகாம்களை நடத்தி முடித்த பள்ளிகள், பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அறிக்கை வழங்க வேண்டும்" என , முதன்மை கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.