நன்கொடை வசூலிக்கும் இன்ஜி., கல்லூரி அங்கீகாரம் ரத்து
நாடு முழுவதும் உள்ள இன்ஜி., கல்லுாரிகளில், எட்டு லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. எனினும், பல அரசு கல்லுாரிகள் மற்றும் குறிப்பிட்ட தனியார் கல்லுாரிகளில் இடங்கள் இல்லாமல், மாணவர்கள் வேறு கல்லுாரிகளை தேடும் நிலை உள்ளது. இதுகுறித்து, ஏ.ஐ.சி.டி.இ., விசாரித்ததில், சரியான தேர்ச்சி காட்டாத கல்லுாரிகளில், அதிக இடங்கள் காலியாக உள்ளன. தேர்ச்சி காட்டிய தனியார் கல்லுாரிகள், மாணவர்களிடம், அதிகளவுக்கு மறைமுக கட்டணமும், நன்கொடை கட்டணமும் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக, மத்திய மனிதவள அமைச்சகத்தின் உத்தரவுப்படி, அனைத்து தொழில்நுட்பக் கல்வி பல்கலைகளுக்கும், ஏ.ஐ.சி.டி.இ., சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், மத்திய அரசு அமைத்த ஸ்ரீ கிருஷ்ணா கட்டண கமிட்டியின் அறிவுறுத்தல்படி, தனியார், அரசு தொழில்நுட்பக் கல்லுாரிகள் நன்கொடை கட்டணம் வசூலிக்கக் கூடாது. இதை மீறும் நிறுவனங்கள் குறித்து, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு, இ - மெயில் மூலம் புகார் அளிக்கலாம். புகார் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட கல்லுாரிக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்படும்&' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.