அரசு பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் நீர்!
தேவதானப்பட்டி: மஞ்சளார் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு வாய்க்காலில் திறக்கப்பட்ட நீர், கரையில் கசிவு ஏற்பட்டு தேவதானப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கிது. இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் அவதிப்படுகின்றனர். தேவதானப்பட்டி பேரூராட்சியில் வைகை அணை செல்லும் வழித்தடத்தில் வாரச்சந்தை நடக்கும் இடத்தை ஒட்டிய பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மேட்டுவளைவு, ரைஸ்மில்தெரு, தெற்குத் தெரு, காந்திமைதானம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியின் தென்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தின் குறுக்கே மஞ்சளார் பாசன புதிய ஆயக்கட்டு பகுதியான எருமலை நாயக்கன்பட்டி, டி.வாடிப்பட்டி பாசன நிலங்களுக்கு நீர் செல்லும் வாய்க்கால் மேடான பகுதி வழியாக செல்கிறது. தாழ்வான பகுதியில் துவக்கப்பள்ளி வளாகம் அமைந்துள்ளது. வாய்க்கால் கரையில் நீர் கசிவு ஏற்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் நீர் தேங்கி நிற்கிறது. தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளதால் ஆசிரியர்கள், மாணவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, இப்பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள நீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.