பின்தங்கிய மாணவனை கரையேற்ற தேர்வு நேரத்திலும் முயற்சி
திருப்பூர்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், படிப்பில் பின்தங்கிய மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்ய, சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, 15ல் துவங்கியது. நாளை - ஆங்கிலம் முதல் தாள்; 29ல், ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நடக்கிறது. ஏப்., 4ல் கணிதம், 7ல் அறிவியல், 11ல் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. பிளஸ் 2 தேர்வு காரணமாக, பத்தாம் வகுப்பு தேர்வுக்கு, இடையிடையே ஐந்து முதல் ஆறு நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை சரியாக படிக்காத மாணவ, மாணவியர் கூட, இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அதிக மதிப்பெண் பெற முடியும். பள்ளி நாட்களில், படிப்பில் பின்தங்கிய மாணவ, மாணவியர் மீது ஆசிரியர்கள் முழு கவனம் செலுத்தி, சிறப்பு பயிற்சி அளித்து, தேர்வுக்கு தயார் செய்தனர். இடைப்பட்ட நாட்களில், அம்மாணவ, மாணவியர் சரிவர படிக்காமல் அலட்சியமாக இருந்து விட்டால், தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படலாம், என ஆசிரியர்கள் அச்சப்படுகின்றனர். இதற்கு தீர்வாக, பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, தேர்வு எழுதிய பின், மதிய நேரத்திலும், விடுமுறை நாட்களிலும், சிறப்பு வகுப்பு நடத்தி, மீண்டும் மீண்டும் அவர்களை, தேர்வுக்கு தயார் செய்வதில், முனைப்பு காட்டுகின்றனர். இதற்காக, தேர்வு எழுதிய மாணவ, மாணவியரை, ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புக்கு அழைத்துச் செல்கின்றனர். எனினும், சில மாணவ, மாணவியர் டிமிக்கி கொடுத்து விடுகின்றனர். ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி என, கல்வித்துறை கட்டாயப்படுத்துகிறது. ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்பதால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ளவே முடியாத அளவுக்கு, படிப்பில் சில மாணவர்கள் மிக மோசமாக உள்ளனர். தமிழில் நான்கு வரிகள் கூட சரிவர எழுத தெரியாத அவர்களை, தேர்வில் தேர்ச்சி பெறச்செய்வது ஆசிரியர்களுக்கு சவாலாகும். கல்வியாண்டு முழுவதும் போராடி, சிறப்பு கவனம் செலுத்தி, கூடுதல் பயிற்சி அளித்து, படிப்பில் பின்தங்கிய மாணவர்களை, தேர்ச்சிக்கு தயார் செய்கிறோம். தேர்வுக்கு இடைப்பட்ட நாட்களில் டிவி, சினிமா, கிரிக்கெட் என இருந்து விட்டால், தேர்ச்சி பெறுவது கஷ்டம். அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, முக்கிய பகுதிகளை மீண்டும் படிக்க வைத்து, தேர்வில் வெற்றி பெறச் செய்ய முயற்சிக்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.