மாணவர்களின் டெக்னிக்; சுற்றுசுவரில் துளை போட்டு ’எஸ்கேப்’
பவானி: அரசுப் பள்ளி சுற்றுச்சுவரில், துளை போட்ட மாணவர்கள், பள்ளி நேரத்தில் அதன் வழியாக, வெளியே சென்று வருவதாக புகார் எழுந்துள்ளது. பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி குருநாத கவுண்டர் வீதியில் உள்ளது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியை சுற்றி ஆறடி உயரத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் சுவரின் மூன்று பகுதிகளில், ஒரு மாணவர் புகுந்து செல்லும் அளவுக்கு, துளை போடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேட்டூர் மெயின் ரோடு பகுதியில், ஓட்டை இருந்த பழைய சுவரை இடித்து, புதிய சுவர் கட்டப்பட்டு விட்டது. இதனால் சமயபுரம் மாரியம்மன் கோவில் பகுதி மற்றும் தாலுகா அலுவலகத்தை ஒட்டியுள்ள சுவர்களில் உள்ள துளை வழியாக, மாணவர்கள் வெளியேறுகின்றனர். பள்ளி நேரத்தில் நகர்வலம் வருகின்றனர். ஏதேனும் விபத்தில் சிக்கினால் விபரீதமாகும் வாய்ப்பு உள்ளது. பள்ளி நிர்வாகத்துக்கு தெரிந்தாலும், இதை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த துளைகளை அடைக்க வேண்டும் அல்லது புதிய சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். மேலும், துளை வழியாக வெளியேறும் மாணவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்றும், அப்பகுதிவாசிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.