கவுன்சிலிங் மையத்தில் ஸ்டால்களை காலி செய்த வங்கிகள்
பொறியியல் கவுன்சிலிங் நடைபெறும் இடத்தில் கல்விக் கடன் வழங்க ஸ்டால் அமைத்திருந்த பல வங்கிகள், தங்களது ஸ்டால்களை காலி செய்துள்ளன. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடந்து வருகிறது. கல்விக் கடன் வழங்க, வங்கிகள் சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகள் என 15க்கும் மேற்பட்ட வங்கிகள் இங்கு ஸ்டால்களை அமைத்திருந்தன. பொறியியல் கவுன்சிலிங்கில் இடங்களை தேர்வு செய்த மாணவர்கள், இந்த ஸ்டால்களுக்கு சென்று வங்கிக் கடன் பெறுவதற்கான தகவல்களை பெற்றுச் சென்றனர். மேலும், மாணவர்களுக்கு வங்கிக் கடன் வழங்குவதற்கான கடிதங்களும் இங்கு வழங்கப்பட்டன. ஜூலை 29ம் தேதியுடன் முதற்கட்ட கவுன்சிலிங் முடிவடைந்தது. முதற்கட்ட கவுன்சிலிங்கிற்கு 59 ஆயிரத்து 848 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்கவுள்ள இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கிற்கு 58 ஆயிரத்து 644 பேர் அழைக்கப்படவுள்ளனர். ஆனால், கவுன்சிலிங் நடைபெறும் இடத்தில் ஸ்டால்களை அமைத்திருந்த பல வங்கிகள், தங்களது ஸ்டால்களை காலி செய்துவிட்டன. இந்தியன் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, கனரா வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத், சென்ட்ரல் பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க் உள்ளிட்ட சில வங்கிகள் மட்டுமே தொடர்ந்து ஸ்டால்களை நடத்தி வருகின்றன. வங்கிகள், குறிப்பிட்ட ‘கட்-ஆப்’ மதிப்பெண் பெற்றிருப்பவர்களுக்கு மட்டுமே கல்விக் கடன் வழங்குவதாக கூறப்படுகிறது. முதற்கட்ட கவுன்சிலிங்கில் 161 வரை ‘கட்-ஆப்’ மதிப்பெண் பெற்றவர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டனர். இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் 161க்கும் குறைவான ‘கட்-ஆப்’ மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட இருப்பதால், வங்கிகள் ஸ்டால்களை காலிசெய்து விட்டதாகத் தெரியவருகிறது. மேலும், ஒவ்வொரு வங்கிக்கும் ஆண்டிற்கு இவ்வளவு தொகை கல்விக் கடன் வழங்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வங்கிகள் இந்த இலக்கை முதற்கட்ட கவுன்சிலிங்கிலேயே எட்டிவிட்டதாகவும், அதனால் தான் ஸ்டால்களை காலி செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. பல வங்கிகளில் கல்விக் கடன் வழங்க மறுக்கின்றனர்; நான்கு லட்சத்திற்கும் குறைவான கல்விக் கடன் பெறவும் பெற்றோர்களிடம் வங்கிகள் உத்தரவாதம் கேட்கின்றன என கல்விக் கடன் பெறுவதில் பல சிக்கல்கள் இருப்பதாக மாணவர்களும், பெற்றோர்களும் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.