ராகிங் மாணவர்கள் டிஸ்மிஸ்: அண்ணா பல்கலை எச்சரிக்கை
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும், கிண்டி பொறியியல் கல்லூரி, ஏ.சி.டெக் கல்லூரி, எஸ்.ஏ.பி., கல்லூரி மற்றும் எம்.ஐ.டி., கல்லூரி ஆகியவற்றில் ஆக. 10ம் தேதி முதல் வகுப்புகள் துவங்குகின்றன. இது குறித்து துணைவேந்தர் கூறியதாவது:ராகிங்கை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடும் விதிமுறைகளை உருவாக்கியுள்ளன. சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் நான்கு கல்லூரிகளில் இளநிலை படிப்பில் 1,700 பேர், முதுநிலை படிப்பில் 1,500 பேர் என 3,200 முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மொத்தம் 6,600 சீனியர் மாணவர்களும் உள்ளனர். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடமும், அவர்களது பெற்றோர்களிடமும், ‘ராகிங்கில் ஈடுபட மாட்டோம்; அதற்குரிய தண்டனையை பற்றி தெரியும்’ என, உறுதிமொழி கடிதம் பெறப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு மாணவர் ராகிங்கில் ஈடுபட்டது தெரியவந்தால், அவருக்கு எக்காரணத்திற்காகவும் மன்னிப்பு வழங்கப்படாது; எச்சரித்து விட்டுவிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அம்மாணவர் உடனடியாக கல்லூரியிலிருந்து நீக்கப்படுவார். மேலும், மூன்று ஆண்டுகள் அம்மாணவர் வேறு எந்தக் கல்லூரியிலும் சேர முடியாது. போலீசிலும் வழக்கு பதிவு செய்யப் பட்டு, சிறை செல்ல நேரிடும். சீனியர் மாணவர்களை, சென்னை அண்ணா பல்கலைக்கழக நான்கு டீன்கள், துறைத் தலைவர்கள் அழைத்து பேசியுள்ளனர். ராகிங்கில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். முதலாம் ஆண்டில் புதிதாக சேரும் மாணவர்கள், ராகிங் தொடர்பாக புகார் தெரிவிக்க பல்கலைக்கழக வளாகத்தில் முக்கிய இடங்களில், ‘பிளாக் பாக்ஸ்’ என்ற பெயரில் புகார் பெட்டி வைக்கப்படும். ராகிங்கில் ஈடுபடும் சீனியர் மாணவர்கள் குறித்து முதலாம் ஆண்டு மாணவர்கள், புகார் மனுவை இப்பெட்டியில் போடலாம். ‘பிளாக் பாக்ஸ்’ புகார் பெட்டி தினசரி காலை, மாலை என இருமுறை திறந்து பார்க்கப்பட்டு, அதிலுள்ள புகார்கள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ராகிங் தொடர்பாக கண்காணிக்க, ஐந்து பேராசிரியர்கள் கொண்ட குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. விடுதிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தனிப் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ராகிங்கை தடுப்பது தொடர்பாக தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. தனியார் பொறியியல் கல்லூரிகளில் ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்பாக, அக்கல்லூரி முதல்வர்களே போலீசில் புகார் செய்யலாம். இவ்வாறு மன்னர் ஜவகர் கூறினார். கடந்த ஆண்டு சென்னை அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில், ராகிங்கில் ஈடுபட்ட மூன்று சீனியர் மாணவர்கள், வகுப்பிலிருந்து சில நாட்கள் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டு, எச்சரிக்கைக்கு பிறகு மீண்டும் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். ஆனால், இந்த ஆண்டு ராகிங்கில் ஈடுபடும் சீனியர் மாணவர்கள் உடனடியாக கல்லூரியிலிருந்து நீக்கப்பட உள்ளனர். இதே நடவடிக்கை, தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் கடைபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.