உள்ளூர் செய்திகள்

தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி

இந்திய மருத்துவக் கவுன்சில் அளித்த பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டுள்ளது. வரும் 20ம் தேதிக்குள் மாணவர்கள் சேர்க்கையை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. தர்மபுரி மருத்துவக் கல்லூரியில், கடந்தாண்டு 100 மாணவர்கள் சேர்க்கப்பட்டு வகுப்புகள் நடந்தன. இந்தாண்டு, மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவக் கவுன்சில், மூன்று முறை ஆய்வு செய்தது. இரு முறை நடந்த ஆய்வில், கட்டடப் பணிகள் முடிக்காததால், மாணவர் சேர்க்கைக்கு, இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி மறுத்தது. இதையடுத்து, மருத்துவக் கல்லூரி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கோர்ட் உத்தரவுப்படி, கடந்த செப்., 16ம் தேதி, இந்திய மருத்துவக் கவுன்சில், இறுதி ஆய்வு நடத்தியது. ஆய்வில், நடப்பு ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கு தேவையான வசதிகள் இருக்கின்றன என, சுப்ரீம் கோர்ட் மற்றும் மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தது. சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், செப்., 26ம் தேதி நடந்த மூன்றாவது கட்ட மருத்துவ கவுன்சிலிங் மூலம், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு, தமிழக அளவில் 85 மாணவர்கள், இந்திய அளவில் 15 மாணவர்கள் உள்ளிட்ட 100 பேர், நடப்பு ஆண்டு எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், செப்., 30ல், கல்லூரியில் சேர அனுமதிக் கடிதமும் வழங்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு மூலம் தமிழக அரசுக்கு, மாணவர் சேர்க்கைக்கான ஒப்புதல் கடிதம் வரவில்லை. இதனால், மாணவர் சேர்க்கையை தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் ஒத்திவைத்தது. மாணவர்கள் தங்கள் ஊருக்கு சென்றனர். இந்த சூழ்நிலையில், தர்மபுரி மருத்துவ கல்லூரி தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்திய மருத்துவக் கவுன்சில் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், தர்மபுரி மருத்துவக் கல்லூரி உட்பட மூன்று கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30ம் தேதிக்குள் இந்த மருத்துவ கல்லூரிகள், மாணவர்கள் சேர்க்கையை முடித்திருக்க வேண்டும் என்றாலும், வரும் 20ம் தேதி வரை மாணவர்களை சேர்க்க கோர்ட் அனுமதி வழங்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் அறிக்கையை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச், தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டுக்கு மாணவர்களைச் சேர்க்க அனுமதி வழங்கப்படுகிறது. அதேநேரத்தில், ஒரு விதிவிலக்காக வரும் 20ம் தேதி வரை மாணவர்களைச் சேர்க்க அனுமதி வழங்கப்படுகிறது என, தெரிவித்தது. இதனால், தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் சீட் பெற்ற மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து, மத்திய அரசிடம் இருந்து மாணவர் சேர்க்கைக்கான அனுமதிக் கடிதம் பெறுவதில், தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்