ஆன்லைனில் வெற்றி நிச்சயம்: கிராமப்புற மாணவர்கள் ஏமாற்றம்
புதுச்சேரி: புதுச்சேரி அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்காக சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அத்துடன் தேர்ச்சியை அதிகரிப்பதற்காக வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.அண்மையில், பொதுத்தேர்விற்கு தயாராகி வரும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியை பள்ளி கல்வித் துறை நடத்தியது. நகர பகுதி மாணவர்களுக்கு நேரடியாகவும், கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவும் நடத்தியது. இது, கிராமப்புற பள்ளிகளில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கல்வியாளர்கள் கூறுகையில், நகர பகுதி மாணவர்களுக்கு தரமான கல்வி, சந்தேகங்களை போக்கி கொள்ள பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன. இதன் காரணமாக நகர பகுதிகளில் தேர்ச்சி சதவீதம் ஆண்டுதோறும் அதிகரித்தே வருகிறது.கிராமப்புறங்களில் அப்படி இல்லை. பின்தங்கிய பகுதிகளில் இருந்து வரும் கிராமப்புற மாணவர்களுக்கு வெற்றி நிச்சயம் நேரடியாக நடத்தப்பட வேண்டும். ஆனால், நகர பகுதி மாணவர்களுக்கு வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியை நேரடியாகவும், கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைனிலும் தலைகீழாக பள்ளிக் கல்வித் துறை நடத்தி உள்ளது. இது, கண்டிக்கதக்கது என்றனர்.