அண்ணாமலை பல்கலையில் சட்டப் படிப்பு துவங்க கோரிக்கை
புவனகிரி: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மீண்டும் சட்டப் படிப்பு துவங் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஊழல் எதிர்ப்பு இயக்கம், அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.இது குறித்து இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் குணசேகரன் உயர் கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனு:சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 1980களில் இளநிலை சட்டப்படிப்பு இருந்தது. சில நிர்வாக காரணங்களால் நிறுத்தப்பட்டது. இதனால் கடலூர் மாவட்ட மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களின் சட்டப் படிப்பு கனவாக மாறியது. தற்போது தமிழகத்தில் மொத்தத்தில் 14 அரசு சட்டக் கல்லூரிகள் மட்டுமே இயங்கி வருகிறது. இவைகளில் போதிய அளவுக்கு மாணவர்கள் சேர முடியவில்லை. பலர் அதிக செலவு செய்து தனியார் சட்டக் கல்லூரிகள் மற்றும் வெளி மாநிலங்கள் சென்று சட்டம் பயிலும் நிலை தொடர்கிறது.இந்நிலையில், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கடந்த 2021ல், அண்ணாமலை பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, மீண்டும் இளநிலை சட்டப் படிப்பு துவங்கப்படும் என்றார். ஆனால் அதற்கான எந்த பணிகளும் மேற்கொண்டதாக தெரிய வில்லைஎனவே, கடலுார் மாவட்டத்தில் ஏழை, எளிய மற்றும் பட்டியலின மாணவர்களின் கனவை நனவாக்கும் நோக்கில் சட்டப்படிப்பை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.