உள்ளூர் செய்திகள்

பள்ளிகளில் இன்று முதல் சிறப்பு துாய்மை பணி

ஈரோடு : எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தில், இன்று முதல் சிறப்பு துாய்மை பணி மேற்கொள்ளப்பட உள்ளது.இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை சார்பில், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் தன்சுத்தம், பள்ளி வளாகத் துாய்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பெறுதல், நெகிழி பயன்பாட்டை குறைத்தல், பள்ளி காய்கறித்தோட்டம் அமைத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. இத்திட்டத்தின் சிறப்பு செயல்பாடாக இன்று முதல், 5ம் தேதி வரை பள்ளிகளில் சிறப்பு துாய்மை பணி மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். வகுப்பறை, பள்ளி வளாகம், மதிய உணவு திட்ட சமையல் அறை, மாணவர் உணவருந்தும் இடம் ஆகிய இடங்களில் துாய்மை பணி மேற்கொள்ள வேண்டும்.பள்ளி வளாகத்தில் நீர் தேங்காத வகையில் வடிகால் அமைக்க வேண்டும். துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், வட்டார வளமேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுனர், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்