ஆதிதிராவிடர் பள்ளிகளில் நலத்திட்ட உதவிகளுடன் மாணவர் சேர்க்கை
நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும், ஏழு ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் நலத்திட்ட உதவிகளுடன் மாணவர் சேர்க்கை நடக்கிறது என கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம், களங்காணியில் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, அ.பாலப்பட்டியில் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நவணியில் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, பாப்பிநாயக்கன்பட்டியில் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, அகரத்தில் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகள் உள்ளன.மாவட்டம் முழுதும், ஐந்து தொடக்கப்பள்ளிகள், ஒரு உயர்நிலைப்பள்ளி, ஒரு மேல்நிலைப்பள்ளி என மொத்தம், ஏழு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த கல்வியாண்டில், 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அ.பாலப்பட்டி, அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர்.அரசு பள்ளிகளில், 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசு பணியில், 20 சதவீதம் முன்னுரிமை.6 முதல், பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உயர் கல்வி பயில, 7.5 சதவீத முன்னுரிமை. பெண் கல்வி இடைநிற்றலை தடுக்க அரசு பள்ளியில் பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் அரசு வழங்குகிறது.மேலும், விலையில்லா பாட புத்தகங்கள், பாட குறிப்புகள், நான்கு இணை சீருடைகள், புத்தக பை, வண்ண பென்சில்கள், காலணிகள் கிரையான்ஸ், நில வரைபடம், கணித உபகரண பெட்டி, பஸ் பாஸ், ஆதிதிராவிட நல ஊக்கத்தொகை, கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை, துாய்மை பணியாளர் குழந்தைகளுக்கான ஊக்கத்தொகை, திறனறி தேர்வு ஊக்கத்தொகை, விபத்தில் வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான உதவித்தொகை, மாற்றுத்திறனாளி குழந்தைகள் சலுகைகள் பெறுவதற்கான அடையாள அட்டை, மருத்துவ முகாம்கள் மற்றும் ஊக்கத்தொகை, சத்துணவுடன் வாரம், ஐந்து முட்டைகள் வழங்குதல். பள்ளி விடுதிகளில் வழங்கப்படும் சலுகைகள் ஆகியவை வழங்கப்படுகின்றன.எனவே, ஐந்து வயதிற்கு மேற்பட்ட மாணவ, மாணவியரின் பெற்றோர் அருகில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.