பி.என்.புதூர் மாநகராட்சி அரசு பள்ளிக்கு நுாறு வயசு!
வடவள்ளி: பி.என்.புதூரில் உள்ள மாநகராட்சி அரசு துவக்கப்பள்ளியில் நூற்றாண்டு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.பி என்.புதூரில் உள்ள மாநகராட்சி அரசு துவக்கப்பள்ளி 1926ம் ஆண்டு துவங்கப்பட்டது. பள்ளியின் நூற்றாண்டு விழா நேற்று பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.தலைமையாசிரியர் சுமதி தலைமை வகித்தார். விழாவின் துவக்கத்தில், பி.என். புதூர் மாரியம்மன் கோவிலில் இருந்து, முன்னாள் மாணவர்கள், பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், நோட், புத்தகம், பேனா, பென்சில் போன்றவற்றை சீர்வரிசைகளாக மேளதாளத்துடன் ஊர்வலமாக, விழா மேடைக்கு எடுத்து வந்தனர்.இவ்விழாவில், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் தெய்வானை, மாநகராட்சி கவுன்சிலர் சாந்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நூற்றாண்டு விழாவையொட்டி, பள்ளி ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.இதில், பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.