மாணவர்களிடையே அதிகரிக்கும் ஒழுங்கீனம் பள்ளியில் விழிப்புணர்வு தேவை
திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சிலர், பள்ளி மற்றும் பொது இடங்களில் ஒழுங்கீனமாக நடந்துக் கொள்வதாக புகார் எழுந்துள்ளது. எனவே, காவல் துறை வாயிலாக பள்ளியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆற்காடுகுப்பம், பூனிமாங்காடு, அருங்குளம், கனகம்மாசத்திரம், திருவாலங்காடு உள்ளிட்ட பகுதிகளில் அரசு மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.இப்பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 7,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் அவ்வப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டு கொள்கின்றனர்.அதே போல், சில மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். மேலும், விளையாடும் போது, சண்டையிட்டு கொண்டு காயமடைந்து, மருத்துவமனைக்கு செல்லும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.எனவே, மாணவர்கள் இடையே அதிகரித்து வரும் ஒழுங்கீன செயலை கட்டுப்படுத்த, காவல் துறை அதிகாரிகள் மூலம், பள்ளியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.