உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ., புத்தகங்கள் வருகை

புதுச்சேரி: புதுச்சேரி அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான புதிய கல்வி ஆண்டு பாடப்புத்தகங்கள் வந்து சேர்ந்துள்ளன.புதுச்சேரி முழுதும் (புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம்) மொத்தம் 410 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் நடைமுறையில் உள்ளது.இந்த நிலையில், நடப்பு கல்வியாண்டிற்கான 2026-27 பாடப்புத்தகங்களை என்.சி.இ.ஆர்.டி., நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்ய கல்வித்துறை நடவடிக்கை எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து, முதற்கட்டமாக 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் 9ம் வகுப்பு தவிர்த்து லாரிகள் மூலம் புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டன.இந்த புத்தகங்கள் நேற்று லாஸ்பேட்டையில் உள்ள வெங்கடசுப்ப ரெட்டியார் அரசு தொழில்நுட்ப மேல்நிலைப் பள்ளியில் வந்து இறங்கின. கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில் புத்தகங்கள் சரிபார்க்கப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 9ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் மட்டும் இன்னும் ஒரு சில நாட்களில் வந்து சேரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாகவே, 410 அரசு பள்ளிகளுக்கும் அந்தந்த வகுப்பு வாரியாகப் புத்தகங்களை அனுப்பி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய கல்வியாண்டு துவங்கிய முதல் நாளிலேயே மாணவர்கள் தடையின்றி பாடங்களைப் படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்