உள்ளூர் செய்திகள்

கல்லுாரி பட்டமளிப்பு விழா: மாணவியர் உறுதிமொழி ஏற்பு

உடுமலை: உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லூரியின் 11வது பட்டமளிப்பு விழா, ஜி.வி.ஜி., கலையரங்கில் நடந்தது.தமிழக அறிவியல் விருது பெற்றவரும், சென்னை உலகப் பல்கலைக்கழகத்தின் இணை இயக்குநர் (ஓய்வு) ராவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கல்லூரி நிர்வாக அறங்காவலர் மற்றும் செயலாளர் ஸ்ரீமதி சுமதிகிருஷ்ணபிரசாத் தலைமை வகித்தார்.முதல்வர் கற்பகவள்ளி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் ராவணன், 'கடின உழைப்பும் அப்துல் கலாம் அவர்கள் கூறியது போல கனவு காண்பதுமே வெற்றியை ஈட்டித் தரும் என்றும், போட்டி நிறைந்த உலகில் நாம் வெற்றி பெற ஆர்வம், நேர்மை, விடாமுயற்சி, பொறுப்புணர்வு வேண்டும்,' என பேசினார்.2020-2023, 2021-2024 மற்றும் 2021-2022, 2022-2024ஆம் கல்வியாண்டில் இளங்கலை மற்றும் முதுகலை பயின்ற 1,110 மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. வகுப்பில் முதன்மை பெற்ற மாணவியருக்கு விருதுகளும் வழங்கப்பட்டது.மாணவியர், 'ஒழுங்கை நிலைநாட்டும் வகையிலும் சமூகத்திற்கு பயன்படும் வகையிலும், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, மதச்சார்பின்மை ஆகியவற்றை பின்பற்றும் வகையிலும் நடந்து கொள்வேன்,' என உறுதிமொழி ஏற்றனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை, கல்லுாரி தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பத்மாவதி, துணை அதிகாரி கோமதி, தேர்வுக் கட்டுப்பாட்டுத் துறை அலுவலர்களும் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்