திறப்பு தேதி மாறுபாட்டால் ஈராசிரியர் பள்ளிகளுக்கு சிக்கல்
காஞ்சிபுரம்: தமிழகத்தில், ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கூறியிருந்த நிலையில், தற்போது ஜூன் 1ம் தேதியே திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், 1 முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.மாணவர்கள் எளிதில் புரிந்து கற்று, தனித்திறன் மிக்கவர்களாக உருவாகும் வகையிலும், மாணவர்களிடம் எதிர்நோக்கப்படும் கற்றல் விளைவுகளை அடையும் வகையிலும், 1 முதல் 3ம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டத்தின்படி மாணவர்களுக்கு புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, 1 முதல் 3ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, புதிய பாடநுால் மற்றும் கற்பித்தல் நுட்பங்கள் சார்ந்த பயிற்சி அளிப்பதற்காக, ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பள்ளி திறப்பு தேதி மாறுபாட்டால், பெரும்பாலான அரசு ஆரம்பப் பள்ளிகளில் சிக்கல் ஏற்படும் என, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் என, 5 ஒன்றியங்களில், 409 ஆரம்ப பள்ளிகள் உள்ளன. இதில், ஒரு சில பள்ளிகளை தவிர்த்து, பெரும்பாலான பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாக உள்ளன.அந்த பள்ளிகளில், ஒரு ஆசிரியருக்கு மட்டும் பயிற்சி அளிக்கப்படும் நிலை உள்ளது. அந்த ஆசிரியர் விடுப்பு எடுத்தால், பயிற்சி எடுக்காத மற்றொரு ஆசிரியர், அனைத்து வகுப்புகளையும் கவனிக்க வேண்டியிருக்கும்.இதனால், மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.எனவே, இந்த சிக்கலை களையும் வகையில், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆசிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.