பள்ளிகளில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தமிழக அரசு உத்தரவு
வரும் ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பையொட்டி, பள்ளி வளாகத்தை தூய்மையான மற்றும் பாதுகாப்பான நிலையில் வைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் ஜூன், 1ம் தேதி திறக்கப்படும் என, தமிழக அரசின், பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதையொட்டி, பள்ளிக் கல்வித்துறை பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க உத்தரவிட்டுள்ளது.நடப்பு கல்வி ஆண்டுக்கான விலையில்லா நலத்திட்டங்களான பாட புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடை, புத்தகப்பை உள்ளிட்டவை மாணவர்கள் அனைவருக்கும், பள்ளி திறக்கும் நாளில் கிடைத்திட உரிய நடவடிக்கைகளை அனைத்து கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும்.பள்ளிகளில் உள்ள ஸ்மார்ட் போர்டு மற்றும் உயர் தொழில்நுட்ப கம்ப்யூட்டர் ஆய்வகங்கள், மாணவர் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் உரிய இணைய வசதியுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் வகுப்பறைகள், சமையலறை, கழிப்பறை, குடிநீர் தேக்க தொட்டி மற்றும் கை கழுவும் இடம் ஆகியன தூய்மையாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.மாணவர்கள் பயன்பாட்டுக்கான குடிநீர் தொட்டியை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து, தூய்மையான மற்றும் பாதுகாப்பான குடிநீர் மாணவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறை, மாணவர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் தண்ணீர் வசதியுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கழிவு நீர் சேகரிப்பு தொட்டிகள், கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் பள்ளி வளாகத்தில், திறந்த நிலையில் இல்லாதவாறு மூடி போட்டு, மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் பராமரிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.