உள்ளூர் செய்திகள்

துணைவேந்தர் காலிபணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் விஸ்வநாதன்

சென்னை: "தமிழக பல்கலைகளில் காலியாக உள்ள துணைவேந்தர், பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன," என, உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.தமிழகத்தில், அரசு கல்லுாரி 2026 - 27ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை தொடர்பான ஆய்வுக் கூட்டம், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள, கல்லுாரி கல்வி இயக்கக வளாகத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். கூட்டம் முடிந்த பின், அவர் அளித்த பேட்டி:பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற, தகுதியான மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு, கல்லுாரிகளில் இடம் கிடைக்கவில்லை என்ற நிலை ஏற்படக் கூடாது என்பது, தமிழக அரசின் நோக்கம். தகுதியான அனைவருக்கும் கல்லுாரிகளில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. மாணவர்கள் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லுாரி பாடப்பிரிவுகளிலும், செயற்கை நுண்ணறிவு பாடங்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். 44 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 'டாடா' நிறுவனத்துடன் இணைந்து, 'தொழில் 4.0' திறன்மிகு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இந்த மையங்கள் வழியே, நடப்பாண்டு, மாணவர்கள் படிக்க, டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்பம்; ரோபோட்டிக்ஸ்; ஐ.ஓ.டி., ஆகிய 3 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளன.தமிழகத்தில் பல்கலைகளில் காலியாக உள்ள துணைவேந்தர் மற்றும் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, இது தொடர்பாக, நீதிமன்ற வழக்குகள் உள்ளன. அது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். எப்போதும் மாநில உரிமைகளை, தமிழக அரசு விட்டுக்கொடுக்காது.இன்ஜி., கவுன்சிலிங் குறித்து, வரும் 29ம் தேதி அறிவிக்கப்படும். தமிழகத்தில் உயர்கல்வித்துறையில் லஞ்சம் என்பதே இனி இருக்காது. வெளிப்படைத் தன்மையுடன் பணியாற்றுவோம்.கல்வியுடன் சேர்ந்து, மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகளுக்கும் முன்னுரிமை வழங்குவோம். கலை, அறிவியல் கல்லுாரி இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள், வரும் 15ம் தேதியும், முதலாம் ஆண்டு வகுப்புகள் ஜூலை 1ம் தேதியும் தொடங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்