மாணவ, மாணவியரிடமிருந்து திறன் போட்டிக்கு விண்ணப்பம் வரவேற்பு
காஞ்சிபுரம்: 'மத்திய அரசு நடத்தும் திறன் 2026 - 27 போட்டியில் பங்கேற்க, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம்' என, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா தெரிவித்துள்ளார்.இது குறித்து கலெக்டர் சினேகா வெளியிட்ட செய்திக்குறிப்பு:தேசிய மற்றும் சர்வதேச அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்கும் வகையில், உலகத் தரம் வாய்ந்த திறமையான இளைஞர்களை கண்டறிந்து, அவர்களின் திறனை மேம்படுத்துவதே போட்டியின் நோக்கமாகும்.கடந்த 2025 - 26ம் ஆண்டு தெற்கு மண்டல போட்டியில் தமிழகம் முதலிடம் பிடித்து, 30 தங்கம், 32 வெள்ளி, 29 வெண்கலம் மற்றும் 17 சிறப்புப் பதக்கங்கள் என மொத்தம் 108 பதக்கங்களை வென்றது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொறியியல், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், திறன் பயிற்சி நிறுவனங்கள் உள்ளிட்ட தகுதியான கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ - மாணவியர் போட்டியில் பங்கேற்கலாம்.விருப்பமுள்ளவர்கள் https://skilldevelopment.tn.gov.in/tnskills/ என்ற இணையதளத்தில் வரும் 15ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.