உள்ளூர் செய்திகள்

இரண்டு பள்ளி கல்வி வாரியங்கள் ஒன்றாக ஒருங்கிணைப்பு

சென்னை: இரண்டு விதமான தேர்வு வாரியத்தை ஒருங்கிணைத்து, ‘பள்ளி தேர்வுக்கான மாநிலக் கல்வி வாரியம்’ என்ற பெயரில் ஒரே வாரியத்தை அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தேர்வுத் துறையில், இடைநிலைக் கல்வி வாரியம் மற்றும் மேல்நிலைக் கல்வி தேர்வு வாரியம் என இரண்டு விதமான வாரியங்கள் ஏற்கனவே செயல்பட்டு வந்தன. இதை ஒருங்கிணைத்து, ‘பள்ளி தேர்வுக்கான மாநிலக் கல்வி வாரியம்’ என்ற பெயரில் ஒரே வாரியத்தை அமைத்து, தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, வாரியத்தின் தலைவராக, தேர்வுத்துறை இயக்குனர் அறிவிக்கப்பட்டுள்ளார். பள்ளிக் கல்வி இயக்குனர், தொழில்நுட்பக்கல்வி இயக்குனர், மருத்துவக் கல்வி இயக்குனர், ஆசிரியர் கல்வி இயக்குனர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், பல்கலைக்கழக பிரதிநிதிகளாக சிவஞானம் (சென்னை பல்கலை), ரங்கராஜ் (அண்ணா பல்கலை), நளினி (எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.தேர்வுத்துறை இணை இயக்குனர் (மேல்நிலை), தேர்வுத்துறை இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி), ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை கலாவதி, மல்லிகா சோமசுந்தரம் (அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை, கில்லை, கடலூர் மாவட்டம்), சரோஜா (தலைமை ஆசிரியை, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, மதுரை), அருளரங்கன் (முதுகலை ஆசிரியர், திருச்செங்கோடு), சம்பந்தன் (முதுகலை ஆசிரியர், ஜே.ஜி.நேஷனல் மேல்நிலைப்பள்ளி, கிழக்கு தாம்பரம், சென்னை), வீரப்பன் (தலைவர், என்.சி.இ.ஆர்.டி.,- பெங்களூரு), ராமதாஸ் (துணை இயக்குனர், புதுச்சேரி கல்வித்துறை) ஆகியோர் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்