காப்பியடித்து பிஎச்.டி. பட்டம் பெற்ற அமைச்சர் சிக்கினார்
கெல்ஹீம்: திருட்டுத்தனமாகவும், மற்றொருவரின் கருத்துகளையும், எழுத்தையும் காப்பியடித்து பிஎச்.டி. பட்டம் பெற்றதாக எழுந்த புகாரின் பேரில் ஜெர்மன் ராணுவ அமைச்சர் வெளிப்படையாக மன்னிப்புகோரியுள்ளதுடன் தான் வாங்கிய பிஎச்.டி. பட்டத்தினை திருப்பி தந்துள்ளார். ஜெர்மனியில் ஆளும் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியில் சான்சலராக ஏஞ்சலா மெர்கெல் உள்ளார். இவரின் நம்பிக்கை பெற்றவரும், ராணுவ அமைச்சராக இருப்பவருமான தியோடர்-ஜூ-கூட்டன்பெர்க் என்பவர் கெல்ஹியம் மாகாண பல்கலையில் பிஎச்.டி. பட்டம் பெற்றிருந்தார். ஆனால் இவர் முறையாக ஆராய்ச்சி செய்யாமல் வேறு ஒருவரின் எழுத்துக்களை ஆராய்ச்சிகளை திருடியும், அப்படியே காப்பியடித்தும் பல்கலையில் சமர்ப்பித்து பிஎச்.டி. பட்டம் பெற்றதாக அந்நாட்டு உள்ளூர் பத்திரிகை ஒன்று தகுந்த ஆதாரங்களுடனும், படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக குற்றப்புலனாய்வு விசாரணை நடத்தப்பட்டு .இவர்மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இவருக்கு சிக்கல் ஏற்பட்டது. இவரின் தில்லுமுல்லு அம்பலமானதால் நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் ஹம்பர்க் தேர்தல் பிரசார பேரணி நடந்த போது, தான் வாங்கிய பிஎச்.டி. பட்டத்தை திருப்பி தருவதாகவும், தவறு செய்துவிட்டதாகவும், தான் யாரையும் ஏமாற்றவில்லை என்றும் இதற்கு எந்த உள்நோக்கம் இல்லை என்றும் கூறினார். இது குறித்து சான்சலர் ஏஞ்சலா மெர்கெல் கூறுகையில், அவரது பிஎச்.டி. பட்டத்தினை வைத்து அமைச்சராக்கவில்லை என்பதாலும், தவறை ஓப்புக்கொண்டதால் அவர் பதவி விலக தேவையில்லை என்றார்.