மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு இந்தாண்டு நடக்குமா?
எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு நாடு முழுவதும் இந்தாண்டு முதலே பொது நுழைவுத் தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால் கால அவகாசம் இல்லாததால் இந்த ஆண்டு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படாது என்றே தகவல்கள் கூறுகின்றன. ஏனெனில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அரசாங்கம் தனது தரப்பில் பதிலளிக்க வேண்டும். அதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவை. நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த எம்.சி.ஐ.(இந்திய மெடிக்கல் கவுன்சில்) எடுத்த முடிவை தமிழகம், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்கள் கடுமையாக எதிர்த்தன. எனவே உச்ச நீதிமன்றத்தில் இந்த பிரச்சினை சென்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு பொது நுழைவுத்தேர்வை நடத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் அந்த தேர்வை இந்த கல்வியாண்டிலேயே நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய போதிய கால அவகாசம் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு இருக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை எம்.சி.ஐ. தற்போது செய்து வருகிறது. தேர்வை நடத்துவது சாத்தியமா என்பது விரைவில் தெரிந்துவிடும். ஆனால் பொதுவாக எம்.பி.பி.எஸ். மற்றும் மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு இந்த கல்வியாண்டில் நடத்தப்படாது என்றே தகவல்கள் கூறுகின்றன.