உள்ளூர் செய்திகள்

மருத்துவ பொது கவுன்சிலிங் இன்று துவங்கியது

தமிழ்நாட்டில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான இடங்கள் 1653 உள்ளன. சுயநிதி மருத்துவக்கல்லூரிகள் 10 உள்ளன. இந்த கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீடு இடங்கள் குறித்து இன்னும் முடிவு எட்டப்படவில்லை. அரசு பல்மருத்துவக் கல்லூரியில் 85 இடங்கள் உள்ளன. தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் 17 உள்ளன. அவற்றில் இருந்தும் அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்கள் வர உள்ளன. இந்த நிலையில் இன்று பொது மருத்துவ கவுன்சிலிங் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி கலை அரங்கில் காலை 8.30 மணிக்கு தொடங்கியது. சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் கலந்து கொண்டு முதல் 10 இடங்களை தேர்ந்து எடுத்த மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் கல்லூரியில் சேர்வதற்கான சான்றிதழை வழங்கினார். முதல் கட்ட கவுன்சிலிங் 6-ந்தேதி முடிவடைகிறது. கவுன்சிலிங்கில் கலந்து கொள்வதற்காக மாணவ மாணவியர் காலையிலேயே பெற்றோருடன் மருத்துவக் கலை அரங்கிற்கு வந்து விட்டனர். கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கலை அரங்கம் நிரம்பி வழிந்தது. மாலை வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்