ஆகஸ்ட் முதல் வாரத்தில் பி.எல். கலந்தாய்வு
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், பிளஸ்2 படித்தவர்களுக்கான 5 ஆண்டு பி.ஏ.பி.எல். மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான மூன்று ஆண்டு பி.எல். படிப்புகளை வழங்கி வருகிறது. ஒரு சில பல்கலைக்கழகங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இரண்டு பல்கலைக்கழகங்களில் மட்டும் முழுமையாக தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இன்னும் சில பல்கலைக்கழகங்கள் ஒரு சில பட்டப்படிப்புகளுக்கான தேர்வு முடிவுகளை வெளியிடாமல் உள்ளது. இதனால், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான மூன்றாண்டு பி.எல். படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வை உடனடியாக துவக்க முடியாமல் உள்ளது. பி.ஏ.பி.எல். படிப்பிற்கு ஜுலை 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற்றது. பி.ஏ.பி.எல்.(ஹானர்ஸ்) படிப்புக்கு ஜுன் 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், பி.எல். (ஹானர்ஸ்) படிப்பிற்கான கலந்தாய்வை ஆகஸ்ட் முதல் வாரத்திலும், பி.எல். படிப்பிற்கான கலந்தாய்வை ஆகஸ்ட் இரண்டாவது வாரத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தர் வீ. விஜயகுமார் மற்றும் பதிவாளர் டி. கோபால் ஆகியோர் கூறினர்.